இந்த விஷயம் விஜய்க்கு தெரியாது: சொல்கிறார் எஸ்.ஏ.சி.
சென்னை: டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாற்று படத்தில் நான் நடிப்பது குறித்து இன்னும் விஜய்யிடம் பேசவில்லை என எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
83 வயதிலும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. பாஸ்கர் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர் விஜய் விக்ரம் இயக்குகிறார். எஸ்.ஏ.சி. டிராபிக் ராமசாமியாக நடிக்கிறார்.
டிராபிக் ராமசாமியாக நடிப்பது குறித்து எஸ்.ஏ.சி. கூறியிருப்பதாவது,

டிராபிக் ராமசாமி
சமூக அக்கறையுடன் படம் எடுப்பவன் நான். டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை பற்றி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தெரிய வந்தது. இந்த வயதிலும் ஒருவர் தனி ஆளாக நின்று அரசியல்வாதிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக துணிந்து வழக்கு தொடர்வது வியப்பளிக்கிறது.

மனைவி
டிராபிக் ராமசாமியுடன் பிறந்தவர்கள் 10 பேர். அனைவரும் அவரை ஒதுக்கிவிட்டனர். அவரின் மனைவி கூட அவரை பிரிந்து சென்றுவிட்டார். அவரை போலீசார் பலமுறை அடித்துள்ளனர். சமூகத்திற்காக போராடுபவரின் கதி இது தானா?

தயாரிப்பாளர்
டிராபிக் ராமசாமி பற்றி படம் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் பாஸ்கர் என்னை அணுகினார். நானே நடித்து இயக்க வேண்டும் என அவர் விரும்பினார். நான் வயதை கருத்தில் கொண்டு இயக்கவில்லை, நடிக்க மட்டும் செய்கிறேன்.

விஜய் விக்ரம்
என்னிடம் உதவியாளராக இருக்கும் விஜய் விக்ரம் இந்த படத்தை இயக்குகிறார். அவர் 2-3 குறும்படங்களை இயக்கியுள்ளார். அதில் ஒன்றில் நான் நடித்துள்ளேன்.

சந்திப்பு
படம் எடுக்க டிராபிக் ராமசாமியை சந்தித்து அனுமதி பெறப்பட்டுள்ளது. நான் அவராக நடிப்பதை அறிந்து டிராபிக் ராமசாமி மகிழ்ச்சி அடைந்தார். நான் அவரை நேரில் சந்தித்து பேசினேன்.

விஜய்
டிராபிக் ராமசாமி படத்தில் விஜய் நடிக்கவில்லை. இந்த படம் குறித்து நான் விஜய்யிடம் இதுவரை பேசக்கூட இல்லை. மறந்துபோன பல வழக்குகள் இந்த படம் மூலம் வெளிச்சத்திற்கு வரும் என்றார் எஸ்.ஏ.சி.


Click it and Unblock the Notifications











