காவலன் தொடங்கி தெறி வரை.. விஜய் படங்களும் பிரச்சினைகளும்
சென்னை: நேற்று வெளியான தெறி படத்தை செங்கல்பட்டு பகுதி தியேட்டர்கார்கள் எடுக்காதததால் படத்தின் வசூல் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி ரசிகர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று தெறியை பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.
2011 ம் ஆண்டு காவலன் படத்தில் தொடங்கிய பிரச்சினை நேற்று வெளியான தெறியையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் விஜய் படங்கள் சந்தித்த பிரச்சினைகள் மற்றும் அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்.

காவலன்
விஜய் படங்களின் பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டது காவலன் தான்.தனது முந்தைய படங்களின் நஷ்டத்துக்கான ஈட்டுத் தொகையை விஜய் தந்தால்தான் காவலனை ரிலீஸாக விடுவோம். இல்லாவிட்டால் அந்தப் படத்துக்கு எந்த ஒத்துழைப்பும் தரமாட்டோம் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து பிரச்சினையைத் தொடங்கி வைத்தது. தொடர்ந்து பைனான்ஸ் பிரச்சினை, தியேட்டர் பிரச்சினை போன்ற பலவற்றையும் தாண்டி ஒருவழியாக திரைக்கு வந்த காவலன் ஹிட்டடித்து விஜய்யை சற்று 'கூல்' ஆக்கியது.

துப்பாக்கி
இதேபோல 2012 ம் ஆண்டில் வெளியான துப்பாக்கி ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டது. படத்தின் தலைப்பில் பிரச்சினை தொடங்கியது. தொடர்ந்து முஸ்லீம்களை மோசமாகக் காட்டுவதாக இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் டி.அப்துல்ரகீம் என்பவர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். மேலும் பல முஸ்லீம் அமைப்புகளும் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.விஜய் படத்திற்கு இந்தளவு பிரச்சினையா? என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு துப்பாக்கி பெரும் பிரச்சினைகளைச் சந்தித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது.

தலைவா
தலைவா என்ற தலைப்பும் 'டைம் டூ லீட்' என்ற வார்த்தைகளும் விஜய்க்கு பெரியளவில் எதிர்ப்புகளைத் தேடித் தந்தது. குறிப்பாக படம் வெளியாகும் நேரத்தில் தியேட்டருக்கு குண்டு வைக்கப் போவதாக யாரோ மிரட்டல் விடுத்தனர் என்று தமிழக அரசு படத்தை வெளியிட அனுமதி தரவில்லை. ஒருவழியாக 'டைம் டூ லீட்' என்ற வார்த்தைகளை நீக்கி சில நாட்கள் கழித்து படத்தை வெளியிட்டனர். தலைவா விஜய்க்கு தோல்விப் படமாக அமைந்தது.

கத்தி
ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் 2 வது முறையாக இணைந்த இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்ததால் வெளியிடக் கூடாது என தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.பெரும் பரபரப்புக்கு நடுவே, தமிழக திரையரங்குகளில், லைகா என்ற பெயரை நீக்கிவிட்டே படத்தை திரையிட முடிந்தது. இதுதவிர குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் தன்னுடைய 'தாக பூமி' படத்தைத் தழுவியே கத்தி எடுக்கப்பட்டதாக வழக்குத் தொடர்ந்தார். 2 வருடங்கள் கடந்தும் இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வெளியாகவில்லை.

ஜில்லா, புலி
ஜில்லா பட வெளியீட்டின் போது அதன் தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல கடந்தாண்டு மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான புலி படமும் பிரச்சினையில் சிக்கியது. புலி வெளியாவதற்கு முந்தைய தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய் மற்றும் புலி தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனை காரணமாக புலி முதல் காட்சிகள் ரத்தானது. மேலும் மற்ற மாநிலங்களில் படத்தை வெளியிடுவதிலும் பிரச்சினை ஏற்பட்டது. வருமான வரித்துறையின் சோதனை புலிக்கு பெரிய பப்ளிசிட்டியாக அமைந்தது. ஆனாலும் படத்தின் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

தெறி
இந்நிலையில் நேற்று வெளியான தெறி படமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கக் கூடாது என்ற தமிழக அரசின் அறிவிப்பால் தெறி படத்தை செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் எடுக்கவில்லை. வேறு படங்கள் எதுவும் வெளியாகாத சூழ்நிலையிலும் கூட, தியேட்டர் உரிமையாளர்கள் இப்படத்தை எடுக்காதது தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது. 2 நாட்கள் முடியப் போகும் தருவாயிலும் இந்தப் பிரச்சினை இன்னும் தீர்க்கப் படவில்லை.

அரசியல் ஆசை காரணமா?
விஜய் கடந்த 2009-ம் ஆண்டு புதுக்கோட்டையில் ‘விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் "அரசியலுக்கு கட்டாயம் வருவேன். ஆனால், நிதானத்தோடு வருவேன்" என்றார். இந்த அறிவிப்புக்கு பிறகே விஜய்யின் படங்களுக்கு தொடர்ந்து சிக்கல் வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











