பிரச்னையா?.. விஜய்க்கு என்னங்க பயம்?.. சரியான நேரத்துல செய்வார்.. உயிர் நண்பர் சஞ்சீவ் அதிரடி
சென்னை: கரூருக்கு விஜய் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தை விஜய் இன்னமும் நேரில் சென்று சந்திக்கவில்லை. அதேசமயம் நேற்று வீடியோ காலில் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகரும், விஜய்யின் உயிர் நண்பர்களில் ஒருவருமான சஞ்சீவ் கரூர் துயரம் குறித்து பேசியிருக்கிறார்.
விஜய்தான் இப்போது தமிழ்நாட்டின் தலைப்பு செய்தி. கரூருக்கு குறித்த நேரத்தைவிடவும் மிக மிக தாமதமாக சென்றதால் அங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. எனவே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக 41 பேர் உயிரிழந்தார்கள். விஜய் தனது பேருந்தில் நின்று பேசிக்கொண்டிருந்தபோதே பலர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்கள். அப்போது அவரது கவனத்துக்கு சென்றதோ இல்லையோ தெரியவில்லை; கூட்டத்தை முடித்து அவர் திரும்பியபோது செய்தி வெளியே வந்துவிட்டது.
கடும் கண்டனம்: ஆனால் விஜய்யோ திருச்சி விமான நிலையத்தில் அதுகுறித்து செய்தியாளர்களிடம் எதுவுமே பேசாமல் சென்றுவிட்டார். பிறகு சில மணி நேரங்கள் கழித்து ட்வீட், சில நாட்கள் கழித்து ஒரு வீடியோ போட்டார். அதிலும் அந்த வீடியோவில் விஜய்யின் பாடி லாங்குவேஜும், அவர் பேசிய டோனும் இந்தப் பிரச்னையை தமிழ்நாடு அரசு பக்கம் மடைமாற்றுவது போல் இருந்ததாக பலரும் குற்றஞ்சாட்டினார்கள்.

நேரில் சென்று சந்திக்கவில்லை: மேலும் விஜய் உடனடியாக பதறியடித்து கரூருக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்; அதை விட்டுவிட்டு ஷூட்டிங் போல் கேமராவில் பேசுகிறார். இதெல்லாம் கொஞ்சங்கூட நியாயமில்லை என்று கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. நேரில் சென்று விஜய் சந்திக்காதது அவரது இமேஜை ஒட்டுமொத்தமாக டேமேஜ் ஆக்கிவிட்டது என்பதுதான் உண்மை.
வீடியோ காலில் விஜயம்: சூழல் இப்படி இருக்க உயிரிழப்பை சந்தித்த குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ காலில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு தாயிடம், 'நான்தான் குழந்தைகளை கூட்டத்துக்கு அழைத்து வர வேண்டாம் என்று சொன்னேனே பிறகு ஏன் அப்படி செய்தீர்கள்' என கேட்டதாகவும் பேச்சு ஓடுகிறது. இது ஒருபக்கம் இருக்க கரூரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்கு அனுமதி கேட்டு டிஜிபியிடம் மனு ஒன்றும் அளிக்கப்பட்டிருக்கிறதாம்.
சஞ்சீவ் பேட்டி: இந்நிலையில் நடிகரும், விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ்விடம் கரூர் துயரம் குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எனக்கு மனதும் சரியில்லை, உடலும் சரியில்லை. கரூரில் ஏற்பட்ட இழப்பை நினைத்துதான் எனக்கு மனது சரியில்லாமல் போனது. என்ன சொன்னாலும் அது பெரிய இழப்பு. விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த விசாரணையில் உண்மை வெளியே வரும் என்று நம்புகிறேன். பிரச்னையை சந்திப்பதிலோ மக்களை சந்திப்பதிலோ விஜய்க்கு பயம் இல்லை. சரியான நேரத்தில் செய்வார் என்று நினைக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











