மீண்டும் "ரவுடி"யுடன் கை கோர்க்கும் தனுஷ்
சென்னை: நானும் ரவுடிதான் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஒரு படம் பண்ணப் போவதாக நடிகர் தனுஷ் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆயுத பூஜை தினத்தில் வெளியான நானும் ரவுடிதான் படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்.ஜே.பாலாஜி, மன்சூர் அலிகான் ஆகியோரின் நடிப்பில் வெளியான இப்படத்தை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனம் சார்பாக தயாரித்து இருந்தார்.

நகைச்சுவை கலந்த காதலுடன் வெளியான நானும் ரவுடிதான் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. மேலும் படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனங்களால் நிறைய திரையரங்குகளில் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கின்றனர்.
சமீப காலமாக தோல்விகளை சந்தித்து வந்த விஜய் சேதுபதிக்கு நானும் ரவுடிதான் மிகப்பெரிய வெற்றியைப் பரிசளித்திருக்கிறது. அதே நேரத்தில் நயனுக்கு ஹாட்ரிக் வெற்றியாக நானும் ரவுடிதான் அமைந்துள்ளது.
இந்தப் படத்தின் வெற்றியால் மகிழ்ந்து போன தனுஷ், விஜய் சேதுபதியுடன் மீண்டும் கைகோர்க்கவிருக்கிறார். தனுஷ் கூறும்போது "மிகவும் மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான ஒரு செய்தி.நம்ம ரவுடி விஜய் சேதுபதி எனது வொண்டர்பார் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்துத் தரப் போகிறார்" என்று கூறியிருக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது தவிர தனுஷ் வேறு எதையும் தெரிவிக்கவில்லை. எனவே படத்தைப் பற்றிய முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷின் இந்த அறிவிப்பால் விஜய் சேதுபதி இப்போ ஹேப்பி அண்ணாச்சி!


Click it and Unblock the Notifications











