கொரோனா விதிகளை மீறிய விஜய் சேதுபதி படக்குழு.. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.. பரபரப்பு!
சென்னை: கொரோனா விதிகளை மீறி விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பை நடத்திய படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் பொன்ராம் இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடிக்கிறார்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

திண்டுக்கள் பேருந்துநிலையம்
தனது 46வது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஒருமையில் பேசி..
அப்போது அரசின் விதிமுறைகளை மீறி படக்குழுவினர் முக கவசம் அணியாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் படப்பிடிப்பு நடத்தியதாக தகவல் பரவியது. இதையடுத்து புகைப்படம் எடுப்பதற்காக தி இந்து புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த படக்குழுவினர் அவரை தடுத்து ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்..
இதையடுத்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சக பத்திரிகையாளர்கள் இதுகுறித்து கேள்வி கேட்கச் சென்றபோது அங்கிருந்த தயாரிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் பத்திரிக்கையாளர்களை கொலை மிரட்டல் விடுத்ததோடு தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகர் விஜய்சேதுபதி வந்தும் பேசியபோதும் ஏற்றுக்கொள்ளாத பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மிரட்டல் விடுத்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

திண்டுக்கல்லில் பரபரப்பு
மேலும் நேற்று கொரோனா விதிமுறைகளை மீறியதாக படக்குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் 5,000 ரூபாய் அபராதம் விதித்தும், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு முறையான அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இதனால் திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











