பரிசுத் தொகையை திருப்பியளித்த விஜய் சேதுபதி... திரையுலகினர் பாராட்டு!
சென்னை : என்.எஃப்.டி.சி மற்றும் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய 15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 21-ம் தேதி நிறைவு பெற்றது. 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 திரைப்படங்கள் திரையிடப்பட்ட இந்த விழாவில் 12 தமிழ்ப் படங்களும் திரையிடப்பட்டன.
தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் குரங்கு பொம்மை, விக்ரம் வேதா, துப்பறிவாளன், தரமணி, அறம், ஒரு கிடாயின் கருணை மனு, 8 தோட்டாக்கள், மாநகரம், மகளிர் மட்டும், கடுகு, மனுசங்கடா, ஒரு குப்பை கதை ஆகிய 12 படங்கள் போட்டியிட்டன.

இவற்றில் சிறந்த திரைப்படமாக சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த், ரவீனா நடிப்பில் உருவான 'ஒரு கிடாயின் கருணை மனு' சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் புஷ்கர் - காயத்ரி இயக்கிய 'விக்ரம் வேதா' படத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்தது.
'மாநகரம்' படத்திற்கு சிறப்பு ஜூரி விருது கிடைத்தது. 'குரங்கு பொம்மை' படத்தில் நடித்த பாரதிராஜவுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விஜய் சேதுபதிக்கு அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை நிறைவு விழாவில் கே.பாக்யராஜ் வழங்கினார்.
விஜய் சேதுபதி விருதுடன் சேர்த்து தனக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனுக்கே வழங்கினார். இதனால், விஜய் சேதுபதியை திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











