தடைக்கு மேல் தடை... ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே நடிகர் விஜய் சேதுபதி படத்துக்கு இப்படி சிக்கல்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் தொடங்குவதற்கு முன்பே சிக்கல்களை சந்தித்து வருகிறது.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி, சிறந்த கதை என்றால் எந்த கேரக்டரிலும் நடித்து வருகிறார்.
இந்தியில் ஆமிர்கானின் லால்சிங் சத்தா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக உடல் உடையை குறைத்து நடிக்க இருக்கிறார்.

தெலுங்கு படத்தில்
தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்பு வருகிறது. அங்கு சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். அவர் கேரக்டருக்கு வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அங்கும் சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது 'உப்பெனா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது.

வன அதிகாரி
இதை அடுத்து, அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதில் நடிக்க அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். இதில் ஹீரோ அல்லு அர்ஜுன் லாரி டிரைவாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் வன அதிகாரியாக நடிக்கிறார்.

சூப்பர் ஹிட்டுக்குப் பின்
தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, கன்னட நடிகர் ராஜ்தீபக் ஷெட்டி ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். சுகுமார் இயக்குகிறார். ரங்கஸ்தலம் என்ற சூப்பர் ஹிட் படத்துக்கு பிறகு சுகுமார் இயக்கும் படம் இது என்பதாலும் அலா வைகுந்தபுரம்லோ படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் என்பதாலும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மூன்று சிக்கல்கள்
இந்நிலையில் இந்தப் படம் தொடர்ந்து மூன்று சிக்கல்களை சந்தித்து உள்ளது. முதலில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை, ஆந்திராவில் உள்ள சேஷாசலம் காட்டில் படமாக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், ஆந்திர மாநில அரசு பர்மிஷன் கொடுக்கவில்லை. இதனால் தாய்லாந்து காடுகளில் படமாக்க முடிவு செய்திருந்தனர். அங்கு படமாக்குவது எளிது என்பதால் படக்குழு உற்சாகமாக இருந்தனர்.

அனுமதி ரத்து
திடீரென கொரோனா வைரஸ் வேகமாக பரவ, அதை கேன்சல் செய்துவிட்டு, கேரளாவில் நடத்த முடிவு செய்தனர். ஆனால், அம்மாநில அரசு படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுப்பதை ரத்து செய்துவிட்டது. தொடர்ந்து மூன்று முயற்சிகளும் தடைபட்டு விட்டதால் என்ன செய்யலாம் என்று படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் படக்குழு யோசனையில் உள்ளது.


Click it and Unblock the Notifications











