என் கருத்தை எந்த இயக்குநரிடம் நான் திணிப்பதில்லை! - விஜய் சேதுபதி
சென்னை: பொதுவாக ஒரு படம் ஆரம்பிக்கும்போது அதன் இயக்குநர் - தயாரிப்பாளர் - ஹீரோவுக்கு இருக்கும் நெருக்கம், படம் முடியும்போது 'பிச்சுக்கும்'. ஆனால் இயக்குநர் ரேணிகுண்டா புகழ் பன்னீர் செல்வம் வேறு ரகம். அவரைப் போல தயாரிப்பாளருக்கு விசுவாசமான ஒரு இயக்குநர் தேடினாலும் கிடைக்க மாட்டார்.
மக்கள் செல்வன், திரையுலகின் பிடித்தமான ஹீரோ விஜய் சேதுபதியும் அப்படித்தான். இயக்குநர்கள் விருப்ப நடிகர் அவர்.
விஜய் சேதுபதியும் பன்னீரும் முதல் முறையாக இணைந்துள்ள படம் கருப்பன். மாடு பிடி வீரன் ஒருவனின் வாழ்க்கை இந்தக் கதை.

ரேணிகுண்டா
இந்தக் கதையில் தான் இணைந்த விதம், இயக்குநருடனான அனுபவம் குறித்து விஜய் சேது பேசியது ஆத்மார்த்தமானது. அவர் கூறுகையில், "ரேணிகுண்டா படத்தில் ஒரு விலைமாது கதாபாத்திரத்தை கூட மிகவும் கண்ணியமாக காட்டியிருப்பார் இயக்குநர் பன்னீர் செல்வம். துளி கூட கவர்ச்சி இருக்காது. இந்தப் படத்தில் கூட ஒரு முதலிரவு பாடல் மிகவும் கண்ணியமாக படம் பிடித்துள்ளார்.

கண்ணியம் மிக்க பன்னீர்
நான் பழகியதில் இது நாள் வரை ஒருவரை பற்றி கூட பன்னீர் செல்வம் குறை சொன்னதில்லை. அவ்வளவு நல்ல மனிதர்.

பாபி சிம்ஹா
ஒரு கமெர்சியல் படத்தை எப்படி எடுத்து செல்வது என்ற வித்தையை அறிந்தவர் ஏஎம் ரத்னம். இந்த படத்துக்கு ரெகுலர் வில்லன் தேவையில்லை, ஒரு ஹீரோ வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்த போது, பாபி சிம்ஹாவிடம் சொன்னேன். அவனும் என் நண்பன் என்பதால் எதுவும் கேட்காமல் நடித்தான்.

பெரிய மீசை, ஒரு ஆசை
சங்குத்தேவன் படம் டிராப் ஆனது எனக்கு பெரும் வருத்தம். அந்த மாதிரி மீசை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தற்செயலாக அதே இடத்தில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.

மாடுபிடி வீரன்
இந்த படத்தில் நான் நிஜமாகவே மாடு பிடிக்கவில்லை. நிஜமான மாடுபிடி வீரர்களின் காட்சிகளோடு அழகாக மேட்ச் செய்து சிறப்பாக எடுத்துள்ளார் ராஜசேகர் மாஸ்டர்.

இயக்குநரை வற்புறுத்த மாட்டேன்
என் கருத்தை எந்த இயக்குனரிடம் நான் திணிப்பதில்லை. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சூழல் இருக்கும். அதனால் அவர்கள் இயக்குநரிடம் கதை கேட்காமல் போயிருக்கலாம். அதை நாம் குறையாக சொல்ல முடியாது.
விமர்சனங்கள்
விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து. அதை ஏற்றுக் கொள்வதும், தவிர்ப்பதும் தான் நாம் செய்ய முடியும். ஊர் வாயை யாராலும் மூட முடியாது," என்றார்.


Click it and Unblock the Notifications











