வடிவேலு மாமா எங்களை ஏமாத்திட்டாரு.. துரோகத்தை பார்த்தோம்.. போட்டுடைத்த விஜயகாந்த் மகன்
சென்னை: தமிழ் சினிமாவில் பீக்கில் இருந்தபோது அரசியல் மேடை ஏறினார் வடிவேலு. விஜயகாந்த்தோடு ஏற்பட்ட மோதல் காரணமாக அவருக்கு எதிராக மேடை ஏறிய வடிவேலு; சரமாரியாக விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால் வடிவேலுவை விஜயகாந்த் பதிலுக்கு எதுவுமே விமர்சனம் செய்யவில்லை. நாளடைவில் இந்தப் பிரச்னை நீர்த்து போனாலும் வைகைப் புயலுக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
வடிவேலு சினிமாவில் அறிமுகமான புதிதில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்தார். முக்கியமாக அவர் உள்ளே வந்தபோது கவுண்டமணியும், செந்திலும் உச்சத்தில் இருந்தார்கள். அதுமட்டுமின்றி வடிவேலுவுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டார்கள் என்ற பேச்சும் இப்போதுவரை உண்டு. அதேசமயம் சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் அவரை நடிக்க வைக்கக்கூடாது என்று கவுண்டமணி கண்டிஷன் போட்டதும், விஜயகாந்த்தான் கவுண்டமணியிடம் பேசி சமாதானம் செய்தார் என்பதும் திரைத்துறையில் அனைவருமே அறிந்ததுதான்.
மோதிய வடிவேலு: அதிலிருந்து விஜயகாந்த்தோடு வடிவேலு நெருக்கமாகத்தான் இருந்தார். தொடர்ந்து இணைந்தும் நடித்தார்கள். தவசி, எங்கள் அண்ணா உள்ளிட்ட படங்களின் காமெடி எல்லாம் அல்ட்டிமேட். இப்படிப்பட்ட நிலைமையில் விஜயகாந்த்தை பகைத்துக்கொண்டார் வடிவேலு. அதாவது அலுவலகம் முன்பு விஜயகாந்த் தரப்பை சேர்ந்தவர்கள் காரை பார்க் செய்ததாகவும்; அப்போது வடிவேலு கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார். இதன் காரணமாக அவருக்கும், விஜயகாந்த்துக்கும் மோதல் போக்கு தொடங்கியதாகவும் பேச்சு உண்டு.

சரமாரியாக விமர்சனம் செய்த வடிவேலு: அப்போதிருந்து விஜயகாந்த்தை தனது எதிரியாகவே பார்க்க ஆரம்பித்தார் வைகை புயல். அதுமட்டுமின்றி 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கொடுத்து விஜயகாந்த்தை சரமாரியாக தாக்கி மேடைகளில் பேசினார். ஆனால் விஜயகாந்த்தோ வடிவேலுவை பதிலுக்கு தாக்கி பேசாமலேயே இருந்தார். தனக்கு நெருக்கமானவர்களிடமும் அவர் தவறாக பேசவில்லை என்றே தெரிகிறது.
மரணத்துக்கு வராத வடிவேலு: காலப்போக்கில் காட்சிகள் மாறி விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு வடிவேலு வராதது மிகப்பெரிய சர்ச்சையையும், விமர்சனத்தையும் உண்டாக்கியது. அதேசமயம் மரணத்துக்கு வந்திருந்தால் தேவையில்லாத பிரச்னைகள் வந்துவிடும் என்பதால்தான் அவர் வரவில்லை என்று வடிவேலு தரப்பினர் சொல்கிறார்கள்.
விஜயகாந்த் மகன் பேச்சு: இந்நிலையில் விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான சண்முக பாண்டியன் வடிவேலு குறித்து பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் ஒரு பட விழாவில் பேசுகையில், "எங்களது சொந்த மாமாவை எப்படி பார்த்தோமோ அதேபோல்தான் வடிவேலு மாமாவை சின்ன வயதில் பார்த்தோம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டு போய்விட்டார். அந்த சின்ன வயதிலேயே துரோகத்தை பார்த்துவிட்டோம். அதனால் இப்போது யார் என்ன செய்தால் என்ன என்று இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











