‘விக்ரம்‘ சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
சென்னை : நடிகர் கமல் நடிப்பில் வெளியாக உள்ள விக்ரம் திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விக்ரம்
ரசிகர் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் விக்ரம் திரைப்படம் இன்னும் ஓரிரு நாளில் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் காட்சிகள், பத்தல பத்தல பாடல் முதல் சிங்கிள் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் பிரம்மிப்பு அடைந்தனர். நாளுக்கு நாள் படம் குறித்த ஆர்வம் அதிகரித்து வருகிறது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், விக்ரம் திரைப்படத்தினை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடைவிதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பெரும் நஷ்டம் ஏற்படும்
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம், கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை கொண்டு பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் இணையத்தில் வெளியிட எந்த அனுமதியும் பட தயாரிப்பு நிறுவனம் வழங்கவில்லை. அனுமதியின்றி படம் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும். மேலும் இது போன்ற அனுமதியின்றி படத்தை வெளியிடுவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. எனவே சட்டவிரோதமாக 1308 இணையத்தில் வெளியிட உள்ளதால் இவற்றிக்கு தடை விதிக்க இணையதள சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல், ஏர் டெல்,ஜியோ உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட வேண்டும் என வாதிட்டார்.

சட்டவிரோதமாக வெளியீட்டுக்கு தடை
இதனை ஏற்று நீதிபதி சி. சரவணன் விக்ரம் படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடைவிதித்து இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Click it and Unblock the Notifications











