“விக்ரம் நடிக்குறத பார்த்து என்னோட வசனத்த மறந்துட்டேன்”: பொன்னியின் செல்வன் கதை சொன்ன விக்ரம்பிரபு
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது.
பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்துள்ள விக்ரம் குறித்து விக்ரம் பிரபு மனம் திறந்துள்ளார்.

ஆதித்ய கரிகாலனான விக்ரம்
தமிழ்த் திரையுலகின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதோடு, மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாகவும் வெளியாகவுள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு என பலரும் நடித்துள்ள இந்தப் படத்தில், ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது. முக்கியமாக விக்ரமின் ஆதித்ய கரிகாலன் கேரக்டருக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்ஸ்
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், 2ம் பாகம் அடுத்தாண்டு ரிலீஸாகும் என இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார். இந்நிலையில், முதல் பாகத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம் பிரபு, பார்த்திபன், மணிரத்னம் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். சென்னை, கொச்சி, பெங்களூரு என ரவுண்டு கட்டி ப்ரோமோஷன் செய்து வருகிறது பொன்னியின் செல்வன் டீம்.

மனம் திறந்த விக்ரம் பிரபு
இந்நிலையில் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனில் விக்ரம் பிரபு தனது அனுபவங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். பார்த்திபேந்திர பல்லவன் என்ற கேரக்டரில் நடித்துள்ள விக்ரம் பிரபுவுக்கு, ஆதித்ய கரிகாலனான விக்ரமுடன் தான் அதிகமான காட்சிகள் இருந்துள்ளது. அதனை குறிப்பிட்டுள்ள விக்ரம் பிரபு விக்ரமுடன் இணைந்து நடித்தது புதிய அனுபவமாக இருந்ததாகக் கூறியுள்ளார். மேலும், பல சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் விக்ரம் பிரபு பேசியுள்ளார்.

வசனத்தை மறந்துவிட்டேன்
"ஆதித்ய கரிகாலன் கேரக்டருக்கான வசனங்களை படித்துவிட்டு செட்டில் போய் நிற்பேன். ஆனால், அங்கு விக்ரம் நடிப்பதை பார்த்தால் அவ்வளவு வித்தியாசமாக இருக்கும். அந்த கேரக்டரை அவர் எடுத்து நடித்ததை பார்த்து நான் எனது வசனத்தையே மறந்துவிட்டேன். எனக்கு பொன்னியின் செல்வனில் நடிப்பதை நம்பவே முடியவில்லை. சிங்கம் என்ற மனநிலையில் தான் விக்ரமின் பெர்ஃபாமன்ஸ் இருக்கும். இந்தப் படத்தில் நடித்தது மறக்கவே முடியாத அனுபவம். எல்லா நடிகர்களின் நடிப்பையும் ரொம்பவே ரசித்துப் பார்த்தேன்" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











