'நெருப்புடா'... கபாலி படமே ரிலீசாகல.. அதுக்குள்ள சுட்டுட்டீங்களேப்பா!?
ரஜினி படங்களின் தலைப்புகளை மட்டுமல்ல, படங்களில் அவர் பேசும் முத்திரை வசனங்களையும் கூட தலைப்பாக்குவதில் குறியாக இருக்கிறது ஒட்டுமொத்த கோடம்பாக்கமும்.
இப்போது ஒரு படி மேலே போய், இன்னும் வெளிவராத அவரது கபாலி படத்தில் இடம்பெறும் பாடல் வரியான நெருப்புடா..வை, சுடச் சுடச் சுட்டு தலைப்பாக்கியிருக்கிறார் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு.
இந்தப் படத்தை அவரே சொந்தமாகவும் தயாரிக்கிறார்.

ஃபர்ஸ்ட் ஆர்டிஸ்ட்
படத்தின் தொடக்க விழா மற்றும் சொந்தப் பட நிறுவனமான ஃபர்ஸ்ட் ஆர்டிஸ்டின் தொடக்க விழா இன்று சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டில் நடந்தது.
இந்தப் படத்தையும் நிறுவனத்தையும் கபாலியின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு, ஏவிஎம் சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ரஜினி ரசிகனாக...
இப்படத்தில், விக்ரம் பிரபு ஒரு தீயணைப்பு வீரராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதனால்தான் ரஜினியின் லேட்டஸ்ட் சென்சேஷனான நெருப்புடாவை அனுமதியுடன் தலைப்பாக்கியதாகத் தெரிவித்தார் விக்ரம் பிரபு.

இணைந்து...
இத்திரைப்படத்தை, 'சந்திரா ஆர்ட்ஸ்' (Chandaraa Arts) மற்றும் 'சினி இன்னோவேஷன்ஸ்' (Cine Innovations) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார் விக்ரம் பிரபு.

இயக்குநர்
இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் பி அசோக்குமார். இசையமைக்கிறார் ஷான் ரோல்டன். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

நிக்கி கல்ராணி
படத்தின் நாயகியாக நிக்கி கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், நாகிநீடு ஆகியோரும் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











