விக்ரமின் கோப்ரா இரண்டாம் நாள் வசூல் நிலவரம்: பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து நல்ல ஓப்பனிங்
சென்னை: விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான 'கோப்ரா' படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
ஆனால், மோசமான திரைக்கதையால் கோப்ரா படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

திரைக்கதையில் சொதப்பிய கோப்ரா
விக்ரம், அஜய் ஞானமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் என மெகா கூட்டணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவான கோப்ரா திரைப்படம், நேற்று முந்தினம் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பின்னர் விக்ரமின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். அதேபோல் கோப்ரா படத்திற்கு முதல் நாளில் சிறப்பான ஓப்பனிங்கும் கிடைத்தது. ஆனால், மோசமான திரைக்கதை, படத்தின் நீளம் போன்றவற்றால் கலவையான விமர்சனங்களே கிடைத்தது. அதேநேரம் விக்ரமின் நடிப்புக்கு ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

நீளத்தைக் குறைத்த படக்குழு
கோப்ரா படத்தின் நீளம் மூன்று மணி நேரமாக இருந்தது, ரசிகரகளுக்கு அயர்ச்சியைக் கொடுத்தது. இதுகுறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததால், படத்தின் நீளத்தை குறைத்தது படக்குழு. இரண்டாவது நாளிலேயே சுமார் 20 நிமிடங்கள் வரையிலான காட்சிகள் ட்ரிம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. ஆனாலும், முதல் நாளில் இருந்த வரவேற்பு இரண்டாவது நாளில் குறைந்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது.

முதல் நாளில் தரமான வசூல்
உலகம் முழுவதும் 1300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது கோப்ரா. அதனால், முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 14 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இது விக்ரம் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய ஓப்பனிங் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம் ஆகிய படங்களுக்கு மட்டுமே இந்தாண்டில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. அதன்பிறகு விக்ரமின் கோப்ரா படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான ஓப்பனிங் கொடுத்துள்ளனர். ஆனாலும், படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

இரண்டாவது நாள் வசூல் நிலவரம்
கோப்ரா தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது., முதல் நாளில் உலகம் முழுவதும் மொத்தம் 25 கோடிகளை வசூலித்திருந்தது. ஆனால் இரண்டாவது நாளில் இது பாதியாக குறைந்துள்ளது. உலகம் முழுவதும் 14 கோடிகள் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 9 கோடியும், இந்தியா முழுவதும் 2 கோடியும், இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 3 கோடியும் வசூலித்துள்ளது. முதல் இரண்டு நாட்களைச் சேர்த்து மொத்தம் 38 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











