“பொன்னியின் செல்வன் படம் சிறந்த காதல் காவியம்”: விக்ரம் என்ன திடீர்ன்னு இப்படி சொல்லிட்டார்
சென்னை: பொன்னியின் செல்வன் நாளை (செப் 30) திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு படக்குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் தனது ஆதித்த கரிகாலன் பாத்திரம் குறித்து விக்ரம் மனம் திறந்து பேசினார்.
மேலும், பொன்னியின் செல்வன் படம் பற்றியும், அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் குறித்தும் த்ரிஷா மனம் திறந்துள்ளார்.

பொன்னியின் செல்வன் ப்ரஸ் மீட்
மணிரத்னம் மிகப் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை (செப்.30) உலகம் முழுவதும் வெளியாகிறது. கடந்த பத்து நாட்களாக இந்தப் படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாக இருந்த படக்குழுவினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். அப்போது பொன்னியின் செல்வன் படம் குறித்து தங்களது அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

இது காதல் காவியம் தான்
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தக் கதையின் மிக முக்கியமான ரோலில் விக்ரம் நடித்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து பேசிய விக்ரம், "இந்தியா முழுவதும் நிறைய வரலாற்று கதைகள் இருக்கிறது, இதுமாதிரி ஒரு படத்தில் நடிக்க மாட்டேனா என்ற கனவுகள் இருந்தன. இறுதியாக எனக்கு பிடித்த ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நான் நடித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ஆதித்த கரிகாலனின் காதல் இன்னும் எனக்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது; காதலுக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். அதை உணர்ந்து நடித்தேன். இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்கும் என நினைக்க வேண்டாம், இது சிறந்த காதல் காவியமாக அமையும்" எனக் கூறினார்.

குந்தவை த்ரிஷாவின் ரியாக்ஷன்
பொன்னியின் செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய த்ரிஷா, "பொன்னியின் செல்வன் படத்திற்காக நீங்கள் அனைவரும் பெருமைப்படுவீர்கள்; வட இந்தியாவிற்கு சென்றாலும் தமிழ்ப் படம் குறித்து அதிகமாக பேசுகின்றனர், எப்போதுமே நான் நடித்த படம் ரிலீஸாகும் முன்பு படப்படப்பு இருக்காது. ஆனால் பொன்னியின் செல்வன் ரிலீஸை நினைத்தால் ரொம்ப படப்படப்பாக உள்ளது; இதுவரை நான் நடித்த படங்களில் எதற்குமே இந்த அளவிற்கு ப்ரோமோஷனுக்காக சென்றதில்லை" எனக் கூறினார்.

திரையரங்குகளில் ஆரவாரம்
மேலும், சின்ன பழுவேட்டரையர் கேரக்டரில் நடித்துள்ள பார்த்திபன் பேசும் போது "நீண்டநாள் காதலித்த பொன்னியின் செல்வன் நாளை ரசிகர்களிடம் செல்கிறது. அடுத்த 6 வாரத்திற்கு இந்த படத்திற்கான ஆரவாரம் எல்லா தியேட்டரிலும் இருக்கும்; இதுவரை எந்த படத்திற்கும் நான் இவ்வளவு பரபரப்பை சந்தித்ததில்லை" என பேசினார். அதேபோல், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது குறித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications











