Dhanush: அடிக்கடி வரும் தனுஷ்.. ஒரு போட்டோ கூட எடுத்துக் கொள்வது இல்லை.. கிராம மக்கள் கோரிக்கை!
தேனி: நடிகர் தனுஷ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் இட்லி கடை. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ஓடிக்கொண்டு உள்ளது. படத்தின் வெற்றியை அடுத்து, நடிகர் தனுஷ் தனது குலதெய்வக் கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு நடத்தினார். இந்நிலையில் அவரது குலதெய்வ கோவில் அமைந்துள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தனுஷ் எங்களுடன் புகைப்படம் கூட எடுத்துக் கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், கதை, திரைக்கதை ஆசிரியர் என தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக உள்ளவர் தனுஷ். மேலே அவர் குறித்து அதாவது அவரது திறமைகள் குறித்து குறிப்பிட்ட அனைத்திலும் தனது பங்கினை செலுத்தி, தனது சிறுவயது அனுபவங்களையும் சேர்த்து இட்லி கடை என்ற படத்தை உருவாக்கி உள்ளார். மிகவும் பிரமாண்டமான கதைக்களத்துடன் படத்தை எடுப்பதை காட்டிலும் எளிய கதைகள் ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகர்களை மிகவும் விரைவில் கனெக்ட் ஆகும் என்பதால் தனுஷ் இந்த படத்தை எடுத்துள்ளார். படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

எமோஷனல் படம்: இட்லி கடை படத்தை பொறுத்தவரையில் அதன் போஸ்டரில் தொடங்கி, டீசர், டிரைலர் , பாடல்கள் உள்ளிட்ட அனைத்தையும் கவனிக்கும்போது படம் கிராமத்து கதைக்களத்தை கொண்டது என்ற எண்ணம் ரசிகர்களுக்கு உருவானது. மேலும் சில பாடல்களைக் கேட்டதும், படம் செம எமோஷனலான படமாக இருக்கும் என்ற எண்ணத்தையும் உருவாக்கியது. படத்தின் கதையை தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் தனது குழந்தைப் பருவத்தில் தனது கிராமத்தில் அவர் எப்படியான மனிதர்களை எதிர் கொண்டாரோ, அப்படியான வாழ்க்கையை அவர் இந்த படத்தில் படமாக்கியதாக தெரிவித்தார்.
வெற்றி: படத்தின் புக்கிங் தொடங்கிய போது பெரிய அளவில் படக்குழுவினருக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் படத்தின் புக்கிங் மிகவும் ஸ்லோவாகவே சென்று கொண்டு இருந்தது. சரி படம் வெளியான பின்னர் ரசிகர்கள் என்ன சொல்கிறார்களோ அதைப் பொறுத்துதான் படம் வெற்றியை நோக்கி நகர்கிறதா? அல்லது தோல்வியை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இப்படி இருக்கையில் படம் வெற்றியை நோக்கி நகர்கிறது என்று கூறும் அளவுக்கு படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கோரிக்கை: இந்நிலையில் நடிகர் தனுஷ் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தனது குலதெய்வக் கோவிலில், குடும்பத்துடன் வழிபாடு நடத்தி விட்டுச் சென்றார். இப்படி இருக்கும்போது, அந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள மக்கள், தனுஷ் உடன் நாங்கள் புகைப்படம் எடுக்க ஆசைப்படுவதாகவும், ஆனால் தனுஷ் கோவிலுக்கு வந்தால் எங்களை பெரிதாக கண்டு கொள்வது கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். நாங்கள் அனைவரும் தனுஷ் ரசிகர்கள்தான். குழந்தைகள் அவரைப் பார்க்க வேண்டும் என்று சாப்பிடாமல் எல்லாம் உள்ளார்கள் ஆனால், தனுஷை பார்ப்பதே சிரமமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். தற்போது அந்த கிராம மக்கள் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











