கலைவாணரின் சிஷ்யர் வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் காலமானார்.. தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்!
சென்னை: கலைவாணர் என்எஸ். கிருஷ்ணனின் சிஷ்யர் என இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் வில்லிசை வேந்தர் சுப்பு.
தனது வில்லிசை மூலம் மக்களிடம் பிரபலமான சுப்பு ஆறுமுகம், திரைத்துறையிலும் தடம் பதித்துள்ளார்.
இந்நிலையில், வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வின் காரணமாக சென்னயில் இன்று காலமானார். அவருக்கு வயது 94.

நெல்லையில் பிறந்தவர்
திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் 1928ம் ஆண்டில் பிறந்த சுப்பு ஆறுமுகம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சுப்பையா பிள்ளை குழுவில் வில்லுப்பாட்டு பயின்றவர். கலைவணரின் நெருங்கிய சிஷ்யர்களில் சுப்பு ஆறுமுகம் மிக முக்கியமானவர். இதன்பின் தனித்து கச்சேரிகள் செய்து புகழ் பெற்றதால் வில்லிசை வேந்தர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் கடந்த 40 வருடங்களாக வில்லிசை பாட்டு கச்சேரிகளை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரப் போராட்டத்தில் வில்லிசை வேந்தர்
தனது வில்லுப்பாட்டின் மூலம் சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மீகம், தேச பக்தியை வளர்த்தவர் சுப்பு ஆறுமுகம். தனது 14வது வயதில் குமரன் பாட்டு கவிதை தொகுப்பு மூலமாக பிரபலமடைந்து, பின்னர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உதவியால் சென்னைக்கு வந்தார். மகாத்மா காந்தியின் சுயசரிதையை சுப்பு ஆறுமுகம் வில்லிசையாக பாடியது பலரது பாராட்டுகளைப் பெற்றது.

திரைத்துறையில் சுப்பு ஆறுமுகம்
மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இதிகாச கதைகளை வில்லுப்பாட்டின் மூலமாக எளிய முறையில் மக்களுக்கு சொல்லி வந்தார். மேலும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நடித்த 19 திரைப்படங்களுக்கும், நாகேஷ் நடித்த 60 படங்களுக்கும் சுப்பு ஆறுமுகம் நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இயல்பாகவே நகைச்சுவையாக பேசும் சுப்பு ஆறுமுகம், படங்களில் சிறந்த நகைச்சுவை வசனங்களை எழுதியும் புகழ் பெற்றார்.

வயதுமூப்பால் மறைவு
கலைமாமணி விருதும், சங்கீத நாடக அகாடமி விருதையும் வென்றுள்ள அவர், கடந்த 2021ல் பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் சுப்பபு ஆறுமுகம் இன்று காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுப்பு ஆறுமுகத்தின் இறுதிச்சடங்கு சென்னை கே.கே நகரில் உள்ள இல்லத்தில் இன்று மாலை அல்லது நாளை காலை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ''வில்லுப்பாட்டு கலைஞர் பத்மஸ்ரீ, கலைமாமணி சுப்பு ஆறுமுகம் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்" என இரங்கல் தெரிவித்துள்ளார். .

நடிகர் கமல் இரங்கல்
இந்நிலையில், வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுக மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் கலைவாணர் என்.எஸ்.கே கண்டெடுத்த இசைவாணர். வில்லுப்பாட்டு கலையை வளர்ப்பதிலேயே வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். அதில் பல புதுமைகளைப் புகுத்தி வில்லடியை வெகுமக்களுக்கும் கொண்டுசேர்த்தவர். அபாரமான நகைச்சுவை எழுத்தாளரும் கூட. இனிய நண்பரை இழந்து விட்டேன். என் அஞ்சலி" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











