உலகின் முதல் மெகா ஹிட் வெப் சீரிஸ் திரைப்படமாக... ஜீ டிவியில் வெளியாகும் விலங்கு சீரிஸ்
சென்னை: விமல் நடிப்பில் உருவான விலங்கு வெப் சீரிஸ் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியானது.
7 எபிசோட்கள் கொண்ட வெப் சீரிஸாக வெளியான 'விலங்கு' ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் மிக சுவாரஸ்யமாக உருவாகியிருந்த இந்த வெப் சீரிஸ்ஸை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், வெப் சீரிஸ்ஸாக ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற விலங்கு, தற்போது திரைப்படமாக வெளியாகவுள்ளது.

வெப் சீரிஸ்களின் காலம்
சினிமா ரசிகர்களுக்கு திரைப்படங்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு வெப் சீரிஸ்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஸ்பானிஷ் வெப் சீரிஸ்ஸான 'மணி ஹெய்ஸ்ட்' மூலம் இந்த ரசனையை புரிந்துகொண்ட ரசிகர்கள், தற்போது தமிழில் வரும் வெப் சீரிஸ்களுக்கும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழில் வெளியான விலங்கு, சுழல், வதந்தி என இந்த மூன்று வெப் சீரிஸ்களும் க்ரைம் திரில்லர் ஜானரில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது.

விமலின் விலங்கு வெப் சீரிஸ்
கடந்த சில வருடங்களாக சரியான திரைப்படங்கள் அமையாத விமல், விலங்கு வெப் சீரிஸ் மூலம் கம்பேக் கொடுத்தார். இயக்குநர் பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த பிரசாத் பாண்டிராஜ் விலங்கு வெப் சீரிஸ்ஸை இயக்கியிருந்தார். மொத்தம் 7 எபிசோட்களாக உருவான விலங்கு வெப் சீரிஸ், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஜீ5 ஓடிடியில் வெளியானது. விமல் ஹீரோவாகவும் இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பலர் முக்கியமான பாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.

விறுவிறுப்பான க்ரைம் திரில்லர்
திருச்சி வேம்பூர் போலீஸ் ஸ்டேஷனை பின்னணியாக் வைத்து இந்த வெப் சீரிஸ் உருவாகியிருந்தது. எஸ்.ஐ. பரிதியான விமல் தனது மனைவி இனியாவின் பிரசவத்துக்காக விடுமுறை எடுக்க நினைக்கிறார். அந்நேரம் பாதி சிதைந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் விமலுக்கு வருகிறது. இறந்தது யார் என விசாரித்து கொண்டிருக்கும்போதே அந்த சடலத்தில் இருந்த தலை காணாமல் போகிறது. தலையின் தேடலுக்கு இடையில் அப்பகுதி எம்எல்ஏவின் மைத்துனரும் கொலையாகி கிடக்கிறார். இந்த இரண்டு கொலைகளும் ஏன் நடந்தன என விசாரிக்கும் விமலுக்கு அடுத்தடுத்து சில அதிர்ச்சியான உண்மைகள் தெரியவருவது தான் கதை.

மிரட்டிய கிச்சா
விமல், பால சரவணன், முனிஷ்காந்த் ஆகியோர் போலீஸ் யுனிபார்மில் கெத்து காட்டியிருப்பார்கள். ஆனால், எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரியான கிச்சா என்ற கேரக்டர் தான் ரசிகர்களையே மிரட்டியது. ரவி என்பவர் இந்த கிச்சா கேரக்டரில் நடித்திருந்தார். கிச்சானலே இழிச்சவாயன் தான என்ற டயலாக் மீம் கண்டெண்ட்டாகவும் கலக்கியது. ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் வெப் சீரிஸ், தற்போது திரைப்படமாக வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஜீ டிவியில் விலங்கு
7 எபிசோட்கள் கொண்ட விலங்கு வெப் சீரிஸை திரைப்படமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி விலங்கு வெப் சீரிஸ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திரைப்படமாக ஒளிபரப்பாகவிருக்கிறது. ஜனவரி 8ம் தேதியான வரும் ஞாயிறு மதியம் 1 மணிக்கு, விலங்கு திரைப்படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வெப் சீரிஸ்களை குறிப்பிட்ட ஓடிடி தளங்களில் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் முதன்முறையாக விலங்கு வெப் சீரிஸ் திரைப்படமாக மாற்ற்ப்பட்டு தொலைக்காட்சியில் டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது. இதனால் ஓடிடியில் விலங்கு வெப் சீரிஸை தவறவிட்ட ரசிகர்கள், ஜி தொலைக்காட்சியில் பார்க்க ஆவலாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











