வானவில்லின் வர்ணஜாலமாய் ஜொலிக்கும்.. விண்ணைத்தாண்டி வருவாயா.. காதலர் தின ஸ்பெஷல்!
சென்னை : காதல் மூன்று எழுத்து மந்திரம், காதல் அதிசய வேதியல் மாற்றம், ஆதாமும் ஏவாளும் பேசிக்கொண்ட முதல் மொழி இப்படி காதலை மிகைப்படுத்தி ஆயிரம் கவிதை படைக்கலாம்.
இதயத்தில் பதியமிடும் முதல் காதல், மனதிற்குள் ரகசியமாய் ஒரு காதல் செடிக்கு கண்ணீர் ஊற்றி வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறது நம் ஒவ்வொருவர் இதயத்திலும்.
மனம் லயித்து, கண்ணோரம் நீரை கசிய வைத்து, இளமையின் அற்புதமான தருணங்களை காட்சிப்படுத்த திரைப்படங்களால் மட்டுமே முடியும். அப்படி, என்னை பாதித்த திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. காதலையும் காதல் வலியையும் உணர்த்திய இப்படம் குறித்து இன்று பார்க்கலாம்.

ஆழமான காதல்
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா, சிம்பு ஹீரோவாக நடித்த இந்த படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்திருப்பார். மேலும் சிறப்பு தோற்றத்தில் நாக சைதன்யா, சமந்தா இருவரும் அவர், அவர் பங்குக்கு அழகாக நடித்திருப்பார்கள்.

கிரேசி அபௌட் யூ,
காதலை தேடிட்டு போக முடியாது, அதுவா நடக்கனும் நம்மல போட்டு தாக்கனும், தலைகீழா திருப்பனும், எனக்கு உன் மேல ஆன மாதிரி. ஜெஸ்ஸி ஐம் கிரேசி அபௌட் யூ, என்று கவிதை நடையிலே கதையை தொடங்குகிறார் இயக்குனர்.

சேலைக்கட்டிய தேவதை
காற்றில் கூந்தலை விரிந்து சேலைக்கட்டிய தேவதையாக வருகிறார் த்ரிஷா. பார்த்தவுடன் பற்றிக்கொண்டு காதலில் விழுகிறார் சிம்பு. முதலில் மறுத்து, மழுப்பி, நட்பாக்கி, பின் உதட்டின் வழியாக இதயத்தை பரிமாறுகிறார் இருவரும்.

சபாஷ் கௌதம்
இன்ஜினியரிங்க படித்த இளைஞனுக்கு சினிமா மீது ஆசை. மலையாள மிடில் கிளாஸ் த்ரிஷாவுக்கு சினிமானா என்னனே தெரியாது என்ற வித்தியாசமான இருவரை கதையில் இணைத்து. இணக்கம் , பிணக்கு, ஊடல் பின் தேடல் என கதையை உணர்ச்சியுடன் நகர்த்தி பல காட்சிகளில் சபாஷ் பெற்றார் கௌதம் மேனன்.

வேதனையின் உச்சம்
மதம், இனம் எனப் பல காரணங்களால் சிம்புவின் காதலை தவிர்க்கிறார் த்ரிஷா. வேறு ஒருவரை திருமணம் செய்து காதலை மறந்து வெளிநாட்டில் வாழ்வை தொடங்குகிறார் த்ரிஷா. பூங்காவில் த்ரிஷாவை சந்திக்கும் சிம்பு காதலில் விழுந்து, தவித்து இறுதியில் வேதனையில் என் வாழ்க்கையில் ஒரு பொண்ணு கடந்துபோனா என கூறி கண்ணீரை மறைக்கும் காட்சி உணர்ச்சியின் உச்சம்.

நீ அவ்ளோ அழகு
என் கண்ணு வழியா உன்னை யாரும் பார்க்கல, நீ அவ்ளோ அழகு என்ற வசனமும், இனி எல்லாம் முடிஞ்சுபோச்சுன்னு நினைச்சேன். முடிஞ்சு தான் போச்சு'ன்னு சொன்னா' என அழகழகான க்ரீட்டிங் கார்டு வசனங்களே படம் முழுக்கக் காதல் நிரப்புகிறது. தன்னை விட்டுப்பிரித்த காதலியை கண்ணியமிக்கவளாக காட்டி காதலை மீண்டும் உயிர்பிக்கவைத்த க்ளைமாக்ஸ் மாஸ் தான்.

காதல் என்றும் ஜொலிக்கும்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காதலர்கள் ஸ்பெஷல் படங்களில் இந்த படம் நிச்சயம் இடம்பெற்று இருக்கும். மனம், இனம்,பிணக்கு, பிரிவு, தோல்வி என அவை எதிலிலும் சிக்காமல் தன்னை அழகாக காத்து பல தலைமுறைகள் தாண்டி இன்னும் பல மாயங்களை காதல் நிகழ்த்திக்கொண்டேத்தான் இருக்கிறது. சூரியனில் மிதக்கும் வானவில்லின் வர்ணஜாலமாய் காதல் என்றும் ஜொலிக்கும். காதலியுங்கள் கண்ணியத்தோடு,
காதலர்கள் அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











