படத்தின் கதையை டைட்டில் சொல்லிவிட்டால் ரசிகன் ஏமாற மாட்டான்-சுந்தர் சி
சென்னை : ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான். படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். விஷால் உடன் ஆக்ஷன் மூலம் மூன்றாவது முறையாக இணையும் இந்த கூட்டணி கமர்ஷியல் மசாலாவாக இருக்கும் என்று கூறியுள்ளார் இயக்குநர் சுந்தர். சி
கமர்சியல் படம், கமர்சியல் டைரக்டர் என்றால் சுந்தர்.சி என்ற பெயரை தமிழ் சினிமாவால் மறக்கவே முடியாது. சுந்தர்.சி சமீபத்தில் சொன்ன விசயம் என்னவென்றால். நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். உலகம் சுற்றும் வாலிபன் படத்தைப் போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். அந்த கனவு தற்போது நடிகர் விஷால் மூலம் நிறைவேறியுள்ளது.

சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிக் கொண்டிருக்கும் படம் ஆக்ஷன். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.
மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த ஆக்ஷன் திரைப்படம். இவர்கள் கூட்டணியில் பாடல்கள் மிகவும் வைரல் ஆவது எல்லோரும் தெரிந்த விசயமே.
இப்படம் பற்றி பேசிய இயக்குநர் சுந்தர்.சி, விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். இப்பொழுது நானும் விஷாலும் ஆக்ஷன் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும், ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் ஆக்ஷன் படமாக்கப்பட்டது. காட்சி பதிவுகள் புது ரகமாக இருக்கும்.
அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே ஆக்ஷன் காட்சிகள் அதிகம் உள்ள திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ளன. தொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள்.
ஆனால் எனக்கு ஆக்சன் படம் செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. எனது அன்பே சிவம் படம் எப்படி ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுத்ததோ அதே போல், இந்த படமும் எனக்கு ஒரு வித்தியாசமான படம் என்று நல்ல பெயரை வாங்கி கொடுக்கும்.
இப்படம் முழுக்க முழுக்க சண்டைக்காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் விஷால் நடித்து வரும் இப்படத்திற்கு ஆக்ஷன் என்றே பெயர் வைத்து விட்டோம். ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான். படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ்ப் படங்களுக்கும் இந்தி ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அனைத்து மொழிகளிலும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு வைத்துள்ளோம்.
இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக்குழுவினருக்குத் தோன்றியது. மேலும் இப்படத்தில் சுபாஷ் என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடிச்சிருக்கார்.
இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றும் அகான்ஸா பூரி என்பவர் பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங், ராம்கி, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் முயற்சிகளில் இருக்கிறது ஆக்ஷன் திரைப்படம். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது என்கிறார் சுந்தர்.சி.
பலம் கொண்ட யானையாக பெரிய நட்சத்திர பட்டாளத்தையே கட்டி இழுப்பது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications











