ஏப் 4, புதன்கிழமை சினிமா துறை பிரமாண்ட பேரணி... ரஜினி, கமலுக்கு அழைப்பு!
சென்னை: தங்களது அனைத்துக் கோரிக்கைகளையும் வலியுறுத்தி சினிமாத் துறையினர் வரும் ஏப்ரல் 4-ம் தேதி கோட்டை நோக்கிப் பேரணி நடத்துகின்றனர்.
இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாஸனுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் திரையுலகம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. டிஜிட்டல் சேவைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், தியேட்டர்கள் கணிணிமயமாக்கப்பட்டு வசூல் விவரங்கள் முழுமையாக தயாரிப்பாளர்களுக்கு தெரிய வேண்டும், நடிகர்கள் சம்பளம் குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தயாரிப்பாளர் சங்கம் முன் வைத்துள்ளது. இவற்றுக்கு திரையுலகில் அனைத்து சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன. திரையரங்க உரிமையாளர் சங்கம் மட்டுமே முரண்டுபிடித்து வருகிறது.
இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை இப்போதைக்கு விலக்கிக் கொள்ளும் திட்டம் இல்லை என்றும், கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறினால் மட்டுமே விலக்கப்படும் என்று விஷால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தங்கள் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு தலையிட்டு நிறைவேற்ற வேண்டும் என்றும், திரையரங்கங்களை முற்றாக சரிப்படுத்த வேண்டும் என்றும் கோரி வரும் ஏப்ரல் 4-ம் தேதி புதன்கிழமை அனைத்து சினிமா அமைப்புகளையும் ஒன்றிணைத்து பேரணி நடத்தப் போவதாகவும், பேரணியின் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து மனு கொடுக்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு ரஜினிகாந்த், கமல் ஹாஸனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி இன்று நடந்த பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











