தள்ளிவச்சு தள்ளிவச்சு கடைசியில நண்பனோடயே மோதப்போகும் விஷால்!
சென்னை : அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'இரும்புத்திரை'. இந்தப்படத்தில் முதல்முறையாக விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சமந்தா. இரும்புத்திரை படத்தில் வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார்.
இந்தப் படம் டிசம்பர் 26-ம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டது. பிறகு பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிட்டிருந்தார் விஷால். அதே தேதியில் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், ஜீவா நடித்திருக்கும் 'கீ' படம் வெளியாகவிருப்பதால், அப்படத்திற்காக தன்னுடைய படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்திருப்பதாக 'கீ' ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவித்தார் விஷால்.

இதனையடுத்து 'இரும்புத்திரை' படத்தை மார்ச் 29-ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார் விஷால். கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய 'இரும்புத்திரை' படம் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்றதால் தள்ளிப்போய் இப்போது தான் ரிலீஸ் ஆகும் நிலைக்கு வந்திருக்கிறது.
ஆர்யா, சாயிஷா சைகல் நடித்துள்ள 'கஜினிகாந்த்' படத்தை மார்ச் 30-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்தத் தகவலை தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா ஏற்கெனவே அறிவித்துள்ளார். இதனால், ஆர்யா, விஷால் நடித்த படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளிவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நெருங்கிய நண்பர்களான விஷாலும் ஆர்யாவும் தங்களது படங்களின் மூலம் மோதிக்கொள்ளவிருக்கிறார்கள். இந்த மாதம் வெளியாகும் எனக் கருதப்பட்ட நிலையில், ஜீவா படத்திற்காக விட்டுக்கொடுத்து தனது நண்பன் ஆர்யா படத்தோடு ரிலீஸ் செய்யவிருக்கிறார் விஷால். ஒருவேளை விஷால் படத்துக்காக ஆர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாறுமா எனத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











