விஷாலின் சக்ரா பட வெளியீட்டு வழக்கு.. சமரசம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தது உயர்நீதிமன்றம்!
சென்னை: சக்ரா பட விவகாரம் தொடர்பாக, டிரைடெண்ட் பட நிறுவன தயாரிப்பாளருக்கும், நடிகர் விஷாலுக்கும் இடையிலான பிரச்னைக்கு தீர்வு காண, ஓய்வுபெற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் - தமன்னா நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார்.
படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி, டிரைடெண்ட் நிறுவனத்தின் ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஆக்ஷன் பட நஷ்டம்
ஆனால் ஆக்சன் படம் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இயக்குனர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையை சொல்லி அதை படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார்.

அதே கதை
தற்போது விஷால் நடிப்பில் சக்ரா என்ற படத்தை இயக்குனர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குனர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

8 கோடி கேட்டு வழக்கு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ஆக்சன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், இரண்டு வாரத்தில் 4 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்தி சக்ரா படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். படத்தை வெளியிட்ட இரண்டு வாரத்தில் மீதமுள்ள 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 648 ரூபாய்க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

எதிர்த்த விஷால்
மேலும் இந்த விவகாரத்தில் மத்தியஸ்தரை டிசம்பர் 23ஆம் தேதிக்குள் நியமிக்கும் நடவடிக்கைகளை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் மேற்கொள்ள வேண்டுமெனவும், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தர் உரிய முறையில் தீர்வு காண வேண்டும் எனவும் உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மத்தியஸ்தர் நியமனம் குறித்தும், சமரச தீர்வு காணும் வரை ஒரு கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரின் பெயரில் டிபாசிட் செய்வது குறித்து இன்று விளக்கமளிக்க இரு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி
இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபுவை நியமிக்க இரு தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்தனர். அதேபோல ஒரு கோடி ரூபாயை டிபாசிட் செய்ய விஷால் தரப்பிலும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, சக்ரா பட விவகாரம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தராக, ஓய்வு பெற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபுவை நியமித்து உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பு ரத்து
4 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் செலுத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, சமரச தீர்வு சட்டப் பிரிவுகளுக்கு முரணாக உள்ளதாக கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஒப்புதல் அளித்தபடி, ஒரு கோடி ரூபாயை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் 14 நாட்களில் டிபாசிட் செய்து, தலைமைப் பதிவாளரிடம் ரசீது சமர்ப்பிக்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Click it and Unblock the Notifications











