'சண்டைக் கோழிகள் சமாதானமாகிடுச்சு'... றெக்கை விரிக்குது ரெண்டாம் பாகத்துக்கு!
சென்னை: 'சண்டக்கோழி' படத்தின் 2 வது பாகத்தில் நடிப்பதை நடிகர் விஷால் உறுதி செய்திருக்கிறார்.
11 வருடங்களுக்கு முன்னால் வெளியான 'சண்டக்கோழி' விஷாலின் திரையுலக வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. இதனால் அப்படத்தின் 2 வது பாகத்தில் நடிக்க விஷால் சம்மதித்தார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நாயகனாகவும், இசையமைப்பாளராக யுவனுக்குப் பதில் இமானும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் 'சண்டக்கோழி 2' ம் பாகத்தை விஷால், லிங்குசாமி இருவருமே உறுதி செய்தனர். இந்நிலையில் லிங்குசாமி படத்தைத் தொடங்க தாமதிப்பதால் இதிலிருந்து விலகிக் கொள்வதாக விஷால் அறிவித்தார்.
இது திரையுலகில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் பழைய கசப்புகளை மறந்து, இப்படத்தை மீண்டும் தொடங்கப் போவதாக விஷால் அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து விஷால் ''லிங்குசாமி, யுவன், மதி கூட்டணியில் 'சண்டக்கோழி 2' உருவாகிறது'' என்று தெரிவித்திருக்கிறார். விஷாலின் இந்த அறிவிப்பை லிங்குசாமியும் உறுதி செய்திருக்கிறார்.
எப்படி இது சாத்தியம் என்று விசாரித்தால் சமீபத்தில் விஷால்-லிங்குசாமி சந்தித்துப் பேசியதாகவும், அதில் தங்கள் மனக்கசப்புகளை மறந்து மீண்டும் ஒன்றுசேர முடிவெடுத்ததாகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஷாலுக்காக, அல்லு அர்ஜுன் படத்தையும் லிங்குசாமி தள்ளி வைத்து விட்டாராம்.இதனால் விரைவில் இப்படம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











