தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் ஓட்டுப் போட முடியுமா?
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் மார்ச் 5-ம் தேதி நடக்கிறது. சங்கத்திலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இந்தத் தேர்தலில் நிற்கவோ, வாக்களிக்கவோ முடியாத நிலையில் உள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான விஷால்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரனை தேர்தல் அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. அவர் சென்னையிலுள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று தயாரிப்பாளர்களைச் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மார்ச் 5-ந்தேதி தேர்தல் நடத்தப்படும்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
தலைவர் பதவிக்கு ஒருவரும், 2 துணை தலைவர்களும், 2 செயலாளர்களும், ஒரு பொருளாளரும், 21 செயற்குழு உறுப்பினர்களும் இந்த தேர்தலில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை (27-ந்தேதி) முதல் பிப்ரவரி 3-ந்தேதி வரை சங்க அலுவலகத்தில் வழங்கப்படும்.
வேட்பு மனுக்களை வருகிற 30-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம். 4-ந் தேதி மாலை மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். பிப்ரவரி 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். இறுதி வேட்பாளர்கள் பட்டியல் பிப்ரவரி 8-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்.
வேட்பாளர்கள் கட்டணமாக தலைவர் பதவிக்கு ரூ.1 லட்சமும், துணைத்தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் பதவிக்கு ரூ.50 ஆயிரமும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் நீக்கத்துக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கி வந்தால் ஓட்டு போடுவதற்கோ அல்லது தேர்தலில் நிற்பதற்கோ அனுமதிக்கப்படுவார்," என்றார்.


Click it and Unblock the Notifications











