வெள்ளம் பாதித்த கடலூர் மக்களுக்கு விஷால் உதவி!
கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நடிகர் விஷால் இன்று உதவிப் பொருள்கள் வழங்கினார்.
இந்த மாவட்ட மக்களில் பலருக்கு அரசியல் கட்சியினரும், தொண்டு நிறுவனத்தினர், பல்வேறு இயக்கத்தினர், பல மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

திரையுலகினரும் உதவிகள் செய்து வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நேற்று சிதம்பரத்துக்கு வந்தார்.
பின்னர் அவர் கீழகுண்டலபாடி, ஜெயகொண்டபட்டினம், வடக்குசாலயன்தோப்பு, விளாகம் உள்பட பல கிராமங்களுக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கனமழையால் சென்னை, கடலூர் உள்பட 5 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் ‘மக்களுக்காக நாம்' என்று ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம் நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நான் தற்போது நடிகனாக இங்கு வரவில்லை. மக்களில் ஒருவனாக வந்துள்ளேன்," என்றார்.
அப்போது நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்களை ஒப்படைக்கப்பட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு, இதுவரை நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக நடிகர் சங்கத்தில் பொதுக்குழுவைக் கூட்டி, அதன் முடிவுப்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


Click it and Unblock the Notifications











