நட்சத்திர கிரிக்கெட், விஷால் பற்றி தவறான செய்தி... இணைய தளங்கள் மீது போலீசில் புகார்!
நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் விஷயத்தில் விஷால் பற்றி தவறான செய்திகளை வெளியிட்ட இணைய தளங்கள் மீது கமிஷனர் அலுவலகத்தின் இன்று புகார் தரப்பட்டுள்ளது.
நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு அஜீத் வராததால் அவர் பாடலை நிகழ்ச்சியில் போடக் கூடாது என விஷால் தடுத்ததாக ஒரு செய்தி. அடுத்து, நட்சத்திர கிரிக்கெட் தோற்றதற்கு மக்கள்தான் காரணம் என்று விஷால் பேட்டி அளித்ததாக இன்னொரு செய்தி.

இந்த இரு செய்திகளும் சில இணையதளங்களில் வெளியாகின. இரண்டுமே பொய்யானவை என விஷால் மறுத்த பிறகும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன.
இந்த நிலையில் இதுகுறித்து விஷால் தலைமை ரசிகர் மன்றத்தின் தலைவர் ஜெயசீலன், செயலாளர் ஹரி ஆகியோர் சென்னை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், "தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அவர்களைப் பற்றிய போலியான செய்தியை சில இணைய தளங்கள் வெளியிட்டுள்ளனர்.
அந்த செய்திகள் அனைத்தும் விஷாலை தவறாக சித்தரித்து எழுதப்பட்டுள்ளன.
இந்த செய்தி வெளியிட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு விஷால் ரசிகர் மன்றத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











