இன்னும் 20 கோடி தேவை.. மறுபடியும் மக்களிடம் உண்டியல் தூக்கி வரும் நடிகர் சங்கம்!
சென்னை: நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக விஷால்-கார்த்தி இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.
நடிகர் சங்கத்திற்காக புதிய கட்டிடம் கட்டப்படும் என்ற வாக்குறுதியை முன்வைத்து நாசர் அணி நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றது.
அதன்படி நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட 29 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஏற்கனவே நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி 9 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளனர்.
இந்நிலையில் மீதமிருக்கும் 20 கோடியைத் திரட்ட விஷால்-கார்த்தி, ஆர்யா-ஜெயம் ரவி ஆகிய நால்வரும் சேர்ந்து நடிக்கவுள்ளனர்.

விஷால்-கார்த்தி
முதல் படத்தில் விஷால்-கார்த்தி இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்திற்காக 3 இயக்குநர்களிடம் கதை கேட்டதாகவும் அதில் ஒரு கதை நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதிரடி ஆக்ஷன்களுடன் விஷால்-கார்த்தி இருவருக்கும் ஏற்றவாறு படத்தின் கதையை முடிவு செய்துள்ளனராம்.

சம்பளம்
இந்தப் படத்திற்காக விஷால்-கார்த்தி வாங்கும் சம்பளம் நடிகர் சங்க நிதியில் சேர்க்கப்படும். மேலும் படத்தின் லாபத்தில் ஒரு பகுதியும் நடிகர் சங்கத்துக்கு அளிக்கப்படும். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் 2 மாதங்களில் முடித்து இந்த வருடத்தில் திரைக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்.

ஆர்யா-ஜெயம் ரவி
2 வது படத்தில் ஆர்யா-ஜெயம் ரவி இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கான கதையைத் தேர்வு செய்து அடுத்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பைத் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம்
5 மாடி கட்டிடம், 1,000 பேர் அமரும் அரங்கம், கல்யாண மண்டபம், பிரிவியூ தியேட்டர், கருத்தரங்க கூடம், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம், சங்க அலுவலகம் ஆகிய அம்சங்களுடன் உருவாகவிருக்கும், நடிகர் சங்கக் கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











