லிங்குசாமி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!
சண்டகோழி 2 படம் கைவிடப்பட்டது தொடர்பாக இயக்குநர் லிங்குசாமி மீது நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார்.
விஷால் - லிங்குசாமி கூட்டணியில் சண்டைகோழி படத்தின் 2-ம் பாகம் உருவாக இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருந்த நிலையில் திட்டமிட்டபடி பட வேலைகள் நடக்கவில்லை.

இந்நிலையில் சண்டகோழி 2 படம் கைவிடப்பட்டதாக விஷால் நேற்று ட்வீட் செய்துள்ளார்.
விஷால் படத்துக்கு பதில், முதலில் அல்லு அர்ஜூனை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறார் லிங்குசாமி.
லிங்குசாமியின் இந்த மனமாற்றம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விஷால் கூறுகையில், "இந்தப் படம் ஆரம்பமாக நான் 14 மாதங்கள் காத்திருந்தேன். சண்டக்கோழி 2 தொடங்காததால்தான் கதகளி, மருது ஆகிய படங்களில் நடித்தேன். 15 நாள்களுக்கு முன்பு வரை லிங்குசாமி, அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஆரம்பிப்பது குறித்து எனக்குத் தெரியாது. என்னிடம் சொல்லாமலேயே அவர் அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட்டார். இதற்கான முன்தயாரிப்பு வேலைகளை நிச்சயம் 2 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்திருப்பார். அப்போதே என்னிடம் சொல்லியிருக்கலாம்.
ஆனால் திரைக்கதையின் இறுதி வடிவம் குறித்து கேட்டபோதுதான் அல்லு அர்ஜுனின் படம் பற்றி தகவல் தெரிவித்தார். தொழில்முறையில் இது சரியல்ல. இதற்குப் பிறகு இருவரும் இணைந்து படம் பண்ணுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.
சண்டகோழி 2 தயாரிப்பாளராக முன்தயாரிப்பு வேலைகளுக்குச் செலவு செய்துள்ளேன். லிங்குசாமிக்கு முன்பணமும் அளித்துள்ளேன். இந்த நஷ்டத்தைச் சுமூகமான முறையில் தீர்க்க நினைத்தேன். ஆனால் அது சரியாக வரவில்லை. இதனால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











