அதுக்கு வாய்ப்பே இல்லை.. அந்த டைரக்டருடன் மீண்டும் இணைய மாட்டேன்.. பிரபல ஹீரோ அதிரடி முடிவு..!
சென்னை: அந்த இயக்குனருடன் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்று பிரபல ஹீரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷால், மிஷ்கின் இயக்கத்தில் ஹீரோவாக நடித்தப் படம், துப்பறிவாளன். இதில் கனியன் பூங்குன்றனாக அவர் நடித்திருந்தார்.
பிரசன்னா, அனு இம்மானுவேல், வினய், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்திருந்தனர். அரோல் கரோலி இசை அமைத்திருந்தார்.

மிஷ்கின், விஷால்
தனது விஷால் பிலிம்பேக்டரி மூலம் நடிகர் விஷால் படத்தைத் தயாரித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி மிஷ்கின், விஷால், பிரசன்னா இணைந்தனர். ஹீரோயினாக ஆஷ்யா நடிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

வாக்குவாதம்
இதில் ரகுமான், கவுதமி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அதிக பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், லண்டனில் நடந்து வந்தது. ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் படத்தில் நடித்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்பட்டது.

பட்ஜெட் அதிகம்
அங்கு ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் படக்குழு சென்னைத் திரும்பியதும் பிரச்னை பெரிதானது. அடுத்த ஷெட்யூலுக்கு ரெடியான நிலையில் ஒப்பந்தத்தில் குறிபிடப்பட்டதை விட, அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம், மிஷ்கின். இதனால் இருவக்கும் பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதோடு போட்ட பட்ஜெட்டை விட, மேலும் பல கோடிகளை மிஷ்கின் அதிகப்படுத்தினாராம். ஏற்கனவே லண்டன் ஷெட்யூலில் பட்ஜெட்டை அதிகப்படுத்தி இருந்தாராம் மிஷ்கின்.

சரமாரியாக புகார்
பட்ஜெட்டை மேலும் அதிகப்படுத்தினால் பைனான்ஸ் வாங்குவது கஷ்டம் என்றும் பிசினஸ் பண்ணுவதும் கடினம் என்றும் விஷால் சொன்னாராம். இதனால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் படத்தில் இருந்து மிஷ்கினை விலக்கினார், விஷால். பின்னர் விழா ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின், நடிகர் விஷால் மீது சரமாரியாக புகார் கூறினார். இது பரபரப்பானது.

சாத்தியமில்லை
இந்நிலையில், அவர்கள் சமாதானம் ஆகிவிட்டதாகவும் விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கினே இயக்க இருப்பதாகவும் செய்தி பரவின. ஆனால், இதை விஷால் தரப்பு மறுத்துள்ளது. இதுபற்றி கேட்டபோது, 'படத்தின் பட்ஜெட்டை அவர் அதிகப்படுத்திவிட்டார். இனியும் அவர் இந்தப் படத்தை இயக்குவது சாத்தியமில்லை. சாக்ரா படத்துக்கு இன்னும் 4 நாள் ஷூட்டிங் இருக்கிறது. அதை முடித்துவிட்டு விஷாலே, துப்பறிவாளன் 2 படத்தை இயக்குவார்' என்று தெரிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











