ஜல்லிக்கட்டு தடையை ஆதரிப்பதா.. விஷால் கொடும்பாவியை எரித்து வீர விளையாட்டு மீட்புக் கழகம் போராட்டம்
சென்னை: ஜல்லிக்கட்டு தடையை ஆதரித்துப் பேசி வரும் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி திருச்சியில் தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகத்தினர் அவரது கொடும்பாவியை எதிர்த்துப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலுக்கு சமீபத்தில் Face of Animal Activism 2015 என்ற விருது விலங்குகள் நல அமைப்பால் கொடுக்கப்பட்டது. இந்த விருதினை கவர்னர் ரோசய்யா கையால் விஷால் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜல்லிக்கட்டு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
அவரது பேச்சைக் கண்டித்து தமிழர் வீர விளையாட்டு கழகம் என்ற அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் விஷால் உருவப்பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். திருச்சி கண்டோன்மென்ட் உதவி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் அவர்களை தடுத்து கைது செய்தனர். விஷால் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என வீர விளையாட்டு சங்கம் அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு
முன்னதாக விழாவிற்குப் பின் விஷால் அளித்த பேட்டியில் விலங்குகள் தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதில் ஜல்லிக்கட்டு குறித்த கேள்விக்கு ''நான் சட்டங்களை மதித்து நடப்பவன். நீதிமன்றத்தில் தீர்ப்புக் கொடுத்தபின் அதுகுறித்து விமர்சிக்கவோ, கருத்துக் கூறவோ எனக்கு உடன்பாடில்லை'' என்று கூறியிருந்தார்.

வீர விளையாட்டு மீட்புக் கழகம்
இந்நிலையில் தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளர் டி.ராஜேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ''தமிழரின் கலாச்சாரம், இறைவழிபாட்டு நிகழ்வான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுக்கள் 5௦௦௦ வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில்..சிலரின் தவறான புரிதலின் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் 2 வருடங்களுக்கு முன்பாக தடை செய்யப்பட்டது.

மத்திய, மாநில
அன்றிலிருந்து இன்றுவரை உச்ச நீதிமன்றத்தையும், மத்திய-மாநில அரசுகளையும் ஜல்லிக்கட்டு தடையை நீக்குமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.சமீபத்தில் விலங்குகள் நல அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

போராட்டம்
தமிழகத்தில் வசித்துக் கொண்டு, தமிழ்ப் படங்களில் நடித்துச் சம்பாதிக்கும் விஷால், தமிழ்க் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் அந்தக் கருத்தைக் கூறியது, தமிழ்ச் சமூகத்தை இழிவு படுத்தும் செயல். அவர் தனது கருத்தை திரும்பப் பெறுவதுடன், மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையெனில், விஷாலின் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் போராட்டம் நடத்துவோம்'' என்று கூறப்பட்டுள்ளது.

உருவ பொம்மை
மேலும் ''விஷால் தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்துவோம்'' என்று அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.

விஷால்
இதுகுறித்து நடிகர் விஷால் '' இந்தப் பேட்டியில் நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை'' என்று தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் விஷால் தன்னுடைய அணிக்கு மதுரை காளைஸ் என்று பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











