முதல்வர் அவர்களே, தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டிவிடாதீர்கள்! - விஷால்
Recommended Video

சென்னை: மேலும் மேலும் வரி விதித்து தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டி விடாதீர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்.
சில வாரங்களுக்கு முன்புதான் தமிழ் சினிமாவில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இதனால் சினிமா டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாக உயர்ந்தது.

இப்போது உள்ளூர் வரி என்ற பெயரில் 10 சதவீதம் கூடுதல் வரியை தியேட்டர்களுக்கு விதித்துள்ளது தமிழக அரசு. இதனால் கட்டண வசூலிலிருந்து 10 சதவீதம் தொகையை அரசுக்கு தியேட்டர்கள் செலுத்த வேண்டி வரும். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தியேட்டர்களை மூடுவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இனி புதுப் படங்களை வெளியிடுவதில்லை என ஸ்ட்ரைக் அறிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "ஏற்கெனவே 28 சதவீத ஜிஎஸ்டி வரியால் தமிழ் சினிமா தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இப்போது கூடுதலாக 10 சதவீத உள்ளூர் வரி வேறு.
கர்நாடகா போன்ற மாநிலங்களில் வசூலிக்கப்படும் வரியை சினிமாவுக்கே திருப்பித் தருகிறார்கள். இங்கு மட்டும் மேலே மேலே வரி விதிக்கிறார்கள்.
முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். இப்படி வரிகள் விதித்து தமிழ் சினிமாவுக்கும் மணி மண்டபம் கட்டிவிடாதீர்கள்.
இந்த வரிகளை எதிர்த்து வேறு வழியே இல்லாமல் வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்களை வெளியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications











