நடிகர் சங்க தேர்தலிலிருந்து விலக விஷால் புதிய நிபந்தனை
சத்யம் சினிமாஸுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்தால், நடிகர் சங்கத் தேர்தலிலிருந்து விலகிக் கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு கலகக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. குறிப்பாக நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவது தொடர்பாக பல சர்ச்சைகள், விவாதங்கள் நடக்கின்றன.
நடிகர்கள் விஷாலும் நாசரும் இதுகுறித்து வெளிப்படையாகக் குரல் எழுப்ப, அவர்களுக்கு ஆதரவாக பெரும்பாலான முன்னணி நடிகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சரத்குமார் தலைமையில் இப்போதுள்ள அதே அணி வரும் தேர்தலிலும் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து நாசரும் விஷாலும் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலைத் தவிர்க்க முடியுமா? என்று விஷாலிடம் கேட்டபோது, "எங்களுடைய ஒரு நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டால் நிச்சயம் போட்டியிட மாட்டோம். நடிகர் சங்கக் கட்டடம் கட்ட எஸ்பிஐ சினிமாவுடன் இணைந்து போட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதிய கட்டடம் கட்டும் பணிகளை உடனே ஆரம்பிக்க வேண்டும். இதைச் செய்தால் நாங்கள் போட்டியிட வேண்டிய அவசியமே இல்லையே!", என்றார்.


Click it and Unblock the Notifications











