அவமானப்படுத்தியதாலேயே தேர்தலில் போட்டியிடுகிறோம் - விஷால் அணி
எங்களை ராதாரவி போன்றவர்கள் அவமானப்படுத்தியதாலேயே தேர்தலில் நிற்கிறோம் என்று நடிகர் விஷால் மற்றும் அவரது அணியினர் தெரிவித்தனர்.
நடிகர்கள் விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் கரூர் சென்றனர். அங்கு நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

விஷால் பிரச்சாரம்
அவர்கள் மத்தியில் விஷால் பேசுகையில், "நாங்கள் உங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம். இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஒருவேளை வெற்றி வாய்ப்பினை இழந்தாலும் உங்களுடன் எப்போதும் துணை நிற்போம். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாங்கள் கேள்வி கேட்க கூடாது என்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் நடிகர்கள் இணைந்து புதிய கட்டிடம் கட்டினால் சங்கம் சார்ந்த நாடக நடிகர்கள் உள்பட 3 ஆயிரம் பேரும் பயன்பெறுவார்கள்.

இழிவுபடுத்தினர்
ஆனால் தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் எங்களை இழிவுபடுத்தி பேசியதால் தான் தேர்தலில் நிற்பது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
நீங்கள் எங்கள் அணிக்கு ஓட்டுப் போடவேண்டும். நடிகர்களிடையே பிரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அது தவறு. பிரிவு ஏற்படவில்லை. கருத்து வேறுபாடுதான் ஏற்பட்டுள்ளது," என்றார்.

கருணாஸ்
நடிகர் கருணாஸ் கூறும் போது, "சென்னையில் நடிகர் சங்க கட்டிடத்தை நடிகர்களே சேர்ந்து கட்ட வேண்டும் என கூறினோம். அதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். சங்க உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் பதில் அளிக்க முடியதா? நாடக நடிகர்களையும், சினிமா நடிகர்களையும் ஒன்று சேர முடியாத நிலையை உருவாக்குகிறார்கள்," என்றார்.

தள்ளுமுள்ளு..
நடிகர்கள் விஷால், கார்த்தி வருகை ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அவர்கள் வந்த தகவல் அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டு விட்டனர். இதனால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. போலீசார் நடிகர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக காருக்கு அழைத்து சென்றனர்.


Click it and Unblock the Notifications











