நடிகர் சூரி கொடுத்த மோசடி புகார்.. 'அது பொய் குற்றச்சாட்டு..' நடிகர் விஷ்ணு விஷால் அதிர்ச்சி!
சென்னை: நடிகர் சூரி, என் தந்தை மீது புகார் கொடுத்திருப்பது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
Recommended Video
பிரபல காமெடி நடிகர் சூரி, விஜய், அஜித், விஷால், சூர்யா உள்பட முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.
இப்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்க இருக்கிறது.

நிலம் தருவதாக
இந்நிலையில், நடிகர் சூரி, சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து சமீபத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், நிலம் வாங்கி தருவதாகக் கூறி, 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, 'வீர தீர சூரன்' படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் மீது புகார் கொடுத்திருந்தார்.

தயாரிப்பாளர்
காவல் ஆணையாளர் உத்தரவை அடுத்து, இந்தப் புகாரின் மீது அடையாறு போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து 'வீர தீர சூரன்' படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் மீது அடையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக, சூரிக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில், 40 லட்சம் ரூபாயை அன்புவேல் ராஜன் பாக்கி வைத்துள்ளார்.

வழக்கு பதிவு
அதை தரமறுத்த நிலையில், நிலம் வாங்கி தருவதாகக் கூறி, சூரியிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரமேஷ், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

விஷ்ணு விஷால்
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை அறிந்தபோது அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது.

முழு நம்பிக்கை
உண்மையில் சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். கவரிமான் பரம்பரை என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

சரியான நடவடிக்கை
இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள், சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம்.
உண்மை வரும்வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை எடுப்பேன். இவ்வாறு நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











