இயக்குனர் இமயம் கலந்துகொண்ட "விசாரணை” திரைப்படத்தின் கலந்துரையாடல் விழா
சென்னை: தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்துள்ள "விசாரணை" திரைப்படம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் எழுத்தாளர் மு.சந்திரகுமார் அவர்களின் "லாக்கப்" புத்தகத்தை மையக் கருத்தாக கொண்டு வெளிவந்த திரைப்படம்தான் "விசாரணை".
சர்வதேச அளவில் வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டதோடு மனித உரிமைகளுக்கான அம்னெஸ்டி விருதினையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது. இத்திரைப்படம் குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்துரை விழா சென்னை பிரசாத் லேப் ஸ்டியோவில் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் நிகழ்வில், இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் மீரா கதிரவன், இயக்குனர் சுப்ரமணியம் சிவா, இயக்குனர் லீனா மணிமேகலை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சாரு நிவேதிதா, ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார், இயக்குனர் அமுதன், எழுத்தாளர் பாமரன், எழுத்தாளர் அஜயன் பாலா, எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன், எழுத்தாளர் டி.ஐ.அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு படத்தைப் பற்றிய கருத்துக்களை முன்வைத்தனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குனர் இமயம் பாரதிராஜா, "வெற்றிமாறன் ஒரு சிறந்த படைப்பைக் கொடுத்திருக்கின்றார். எப்போது ஒரு காட்சியை பார்க்கும் போது நம்மையறியாமல் அந்த உணர்வினை உள்வாங்கிக் கொள்கின்றோமோ அதுதான் ஒரு சிறந்த படைப்பாளியின் வெற்றி. வெற்றிமாறன் இதே போன்ற சிறந்த படைப்புகள் தன்னையே வெற்றி கொள்ளும் அளவிற்கு அடுத்தடுத்த படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பேசினார்.


Click it and Unblock the Notifications











