அமெரிக்கா, இங்கிலாந்தில் தொடர்ந்து விஸ்வரூபம் வசூல் மழை - தமிழகத்திலும்தான்
சென்னை: அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தொடர்ந்து விஸ்வரூபம் வசூலைக் குவித்து வருகிறதாம். 4வது வாரமாக அங்கு படம் வெற்றிகரமாக ஓடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல தமிழகத்திலும் பெருவாரியான தியேட்டர்களில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக விஸ்வரூபம் ஓடி வருகிறதாம்.
சர்ச்சைகள் காரணமாக தமிழகத்தில் விஸ்வரூபம் மிகவும் தாமதமாக வெளியானது. அதேசமயம், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அது முதலிலேயே வெளியாகி விட்டது. தற்போது நான்காவது வாரமாக அங்கு விஸ்வரூபம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்தில் 11 தியேட்டர்
இங்கிலாந்தில் இந்தப் படம் 11 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. அங்கு இதுவரை ரூ. 2.49 கோடியை வசூலித்துள்ளதாம். அமெரிக்காவில் 11 திரைகளில் திரையிடப்பட்டுள்ள விஸ்வரூபம் ரூ. 5.57 கோடியை வசூலித்துள்ளதாம்.
அமெரிக்காவில் தெலுங்கு விஸ்வரூபம் இதுவரை 1.08 கோடி வசூலித்துள்ளதாம். அங்கு 6 திரைகளில் படம் திரையிடப்பட்டுள்ளது.

ரூ.120 கோடி வசூல்
இதேபோல லேட்டாக ரிலீஸான தமிழகத்திலும் தொடர்ந்து விஸ்வரூபம், பெருவாரியான தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இப்படம் ரூ. 120 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாக சில நாட்களுக்கு முன்பே தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது நினைவிருக்கலாம். மேலும், கமல்ஹாசன் ஏற்கனவே கணித்தபடி இந்தப் படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலைக் குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் தடை நீக்கம்
கடந்த 24ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் அந்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. மலேசியாவிலும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு குரல் கிளம்பியதை அடுத்து 25ம் தேதி முதல் மலேசியா அரசு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தது.
இந்த நிலையில் திரையரங்குகளில் தடை செய்யப்பட்ட விஸ்வரூபம் படத்தின் திருட்டு சி.டி.க்கள் மலேசியாவில் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. இதனையடுத்து விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











