எந்திரனுக்குப் பிறகு ரூ 100 கோடியைத் தாண்டிய விஸ்வரூபம்! - கமல் அறிவிப்பு
சென்னை: தமிழ் சினிமா விஸ்வரூபம் படம் வசூலில் ரூ 100 கோடியைத் தாண்டிவிட்டதாக நடிகர் கமல்ஹாஸன் அறிவித்துள்ளார். இதற்காக ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் ரஜினியின் சிவாஜி, எந்திரனுக்குப் பிறகு ரூ 100 கோடிக்கு மேல் வசூலித்த படமாக விஸ்வரூபம் அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் மூன்று மொழிகளிலும் 18 நாட்களில் இந்த வசூலைப் பெற்றுள்ளது.

சர்ச்சைகள், தடைகள்:
பல்வேறு சர்ச்சைகள், தடைகள் காரணமாக விஸ்வரூபம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட படமாக மாறியது. எதிர்ப்பார்ப்பு எகிறியதால் படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.
தெலுங்கு, இந்தியில் முதலில் வெளியான விஸ்வரூபம், கடந்த 7-ம் தேதிதான் தமிழகத்தில் வெளியானது. இந்த மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை ரூ 100 கோடியை இந்தப் படம் குவித்துள்ளது.

ஆந்திராவில் ரூ 20 கோடி, இந்தியில் ரூ 11 கோடி:
ஆந்திராவில் ரூ 20 கோடியை விஸ்வரூபம் வசூல் செய்துள்ளது. இந்தியில் ரூ 11 கோடியை வசூலித்துள்ளது.
இதுகுறித்து கமல்ஹாஸன் கூறுகையில், "இந்தப் படத்துக்கு இந்த பிரமாண்ட வெற்றி கிடைக்கும் என்பதை எதிர்ப்பார்த்தேன். அதைத்தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். இப்போது படம் ரூ 100 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டதாக செய்தி கிடைத்துள்ளது. சிலர் ரூ 120 கோடி என்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ரசிகர்கள் என்மேல் வைத்துள்ள அன்புதான். அந்த அன்புக்கு பிரதிபலனாக என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அன்பைத் தருவதுதான். நல்ல படைப்புகளைத் தருவதுதான். அதைத் தொடர்ந்து செய்வேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











