twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'வடிவேலு இல்லாத காமெடி களம் நல்லால்லதான்... சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்!' - விவேக் பேட்டி

    By Shankar
    |

    வடிவேலு இல்லாத காமெடி களம் நன்றாக இல்லைதான். எல்லோருமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும், என்றார் நகைச்சுவை நடிகர் விவேக்.

    பசுமை கலாம் என்ற தனது மரம் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நட்டு சாதனைப் புரிந்துள்ளார் விவேக். ஒரு நடிகர் என்ற வட்டத்தைத் தாண்டி, அவரது இமேஜை தூக்கி நிறுத்தியுள்ளது அவரது இந்த முயற்சி.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தத் திட்டத்தை விவேக் ஆரம்பித்தார். இந்த ஆண்டு ஜூனில் திட்ட இலக்கை எட்டியுள்ளார். தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதி உள்ள மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் விவேக்.

    இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டி:

    அப்துல் கலாமின் கனவான ஒருகோடி மரம் நடுதல் என்ற திட்டத்தின் முதல் பகுதிதான் இது. மீதி தொன்னூறு லட்சம் மரக்கன்றுகளை தமிழகம் முழுக்க நடும் திட்டம் உள்ளது.

    அதற்கு எத்தனை ஆண்டுகளாகும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்த இலக்கை தொட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    என்னுடைய இந்த முயற்சிக்கு பல நிறுவனங்கள் துணை நிற்கின்றன. மரம் நடுதலுக்கான பெரும் செலவுகளை ஏற்கின்றனர். அவர்களுக்கு நன்றி.

    உண்மையில் மக்களிடையே மரம் நடுதல், மரங்களால்தான் மழை என்ற விஷயம் உணரப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. இந்த அறிவியல் உண்மைகளை வலியுறுத்தி இனி பிரச்சாரம் செய்யப் போகிறேன்.

    அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக வரமுடியாத சூழல் குறித்து...

    அதுபற்றி நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. தேர்தலில் போட்டியிடுவது அவரது சொந்த முடிவு. ஆனால் எங்களுக்கு எப்போதும் ஜனாதிபதி அவர். அவருக்காக எதுவும் செய்வோம். அவர் சொல்லுக்கு கட்டுப்படுவோம்.

    சிறிய இடைவெளிக்குப் பிறகு நீங்கள் நடித்து வந்துள்ள முரட்டுக்காளை குறித்து...

    அது நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட படம். முதல் முறையாக ஒரு திருநங்கை வேடத்தில் நடித்துள்ளேன். மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

    குறிப்பாக பதினாறு வயதினிலே டாக்டர் - ஸ்ரீதேவி போர்ஷனை நகைச்சுவைக்குப் பயன்படுத்தியிருந்ததற்கு நல்ல வரவேற்பு. பதினாறு வயதினிலே படத்துக்கு நான் பரம ரசிகன். பல ஆண்டுகள் மனசுக்குள் ஊறியிருந்த அந்த விஷயம் இந்தப் படத்தில் நகைச்சுவையாக வெளிப்பட்டுள்ளது.

    அந்த டாக்டர் கேரக்டருக்கு செல் முருகன் ரொம்ப பொருத்தமாக இருந்தார். இன்று பெருமளவு பேசப்படும் காமெடியாகிவிட்டது அது!

    நீங்களும் வடிவேலுவும் உச்சத்திலிருந்தீர்கள் ஒரு கட்டத்தில். இப்போது வடிவேலு இல்லாத இந்த காமெடி களத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

    கஷ்டமாகத்தான் உள்ளது. வடிவேலுவின் பிரச்சினைக்கு அவர் காரணமா.. வேறு காரணம் என்றெல்லாம் நான் ஆராய விரும்பவில்லை. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். எல்லாம் சீக்கிரமே சரியாகிவிடும் என நம்புகிறேன்," என்றார்.

    இனி அடுத்த ரவுண்டு...

    பசுமை கலாம் திட்டத்தை செயல்படுத்தும் மும்முரத்தில் பல பெரிய படங்களைக் கூட இழந்ததாகக் கூறும் விவேக், இந்த ஆண்டு முழுக்க சினிமாவில் கவனம் செலுத்தப் போகிறாராம்.

    சூர்யாவுடன் சிங்கம் 2, முக்தா சுந்தரின் பத்தாயிரம் கோடி, கந்தா உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அஜீத், விஜய் என தன் முந்தைய ஹீரோக்களுடனும் கைகோர்க்கப் போகிறாராம்!

    English summary
    Vivek says that he is regretting for the present position of Vadivelu and hoped that everything would be settled soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X