90-ஸ் கிட் மித்ரனின் பெயரை கூகுள் என்றுதான் வைக்க வேண்டும்... கார்த்தி கலகலப்பான பேச்சு
சென்னை: சர்தார் திரைப்படத்தை தொடர்ந்து தற்சமயம் அதனுடைய இரண்டாம் பாகத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.
இந்தப் படத்திற்காக தான் சேகரித்த தகவல்களில் ஒரு பகுதி மட்டும்தான் படத்தில் பயன்படுத்தியதாகவும், நைல் நதி கரையோரத்தில் விதைக்கப்பட்ட விதை போல இந்தத் தண்ணீர் பிரச்சனை களத்தில் நிறைய தகவல்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி இயக்குநர் மித்ரனை கூகுளுடன் ஒப்பிட்டு ஒரு மேடையில் பாராட்டி பேசியிருக்கிறார்.

இந்திய அளவில் வெற்றி
பி.எஸ்.மித்ரன் இந்திய அளவில் சென்றடைந்துள்ள ஒரு இயக்குநர் என்று சொன்னால் மிகையாகாது. காரணம், இரும்புத்திரை திரைப்படத்தின் இந்தி பதிப்பு பிரபல ஓடிடியில் இருந்தாலும் யூடியூபில் மட்டும் கிட்டத்தட்ட 200 மில்லியன் பார்வையாளர்களை அந்தப் படம் சென்றடைந்துள்ளது. வட இந்தியர்கள் படத்தை பார்த்தது மட்டுமில்லாமல் படத்தைப் பற்றியும் இயக்குநர் பற்றியும் கமெண்ட்டுகளில் சிலாகித்து பேசியிருப்பதை நீஙகள் பார்க்க முடியும்,

மெனக்கெடல்கள்
இரும்புத்திரை திரைப்படத்தில் தொழில்நுட்பத்தை வைத்து எப்படி திருடுகிறார்கள் என்று காட்டிய மித்ரன் சர்தார் திரைப்படத்தில் தண்ணீர் பிரச்சனையை காட்டி இருப்பார். அது மட்டுமில்லாமல் ரகசிய உளவாளிகள் செயல்படுவது எப்படி, அந்தக் காலத்து நாடக நடிகர்கள் எப்படி இருந்தார்கள் போன்ற பலவற்றை நுட்பமாக படம்பிடித்து காட்டினார். இதற்காக ரகசிய உளவாளிகளுடன் பயணித்துள்ளாராம்.

வெவ்வேறு பிரச்சனைகள்
படத்தில்தான் இவ்வளவு தகவல்களை சொல்கிறார் என்று பார்த்தால், பேட்டிகளில் கூட நில பட்டாவை வைத்து நடக்கும் மோசடிகள் குறித்தும், வெளிநாட்டு ஆடை நிறுவனங்கள் நம்மூரில் செய்யக்கூடிய மோசடிகள் குறித்தும், ஒரே நிறுவனம் பல பெயர்களில் பொருட்களை தயாரித்து தங்களுடைய பொருட்களுக்கே போட்டிகளை உருவாக்கி மக்களிடம் விற்பனை செய்வது பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மித்ரன் அல்ல கூகுள்
நடிகர் கார்த்தி கூட சமீபத்தில் இவரைப் பற்றி பேசும் பொழுது இவருக்கு மித்ரன் என்ற பெயருக்கு பதிலாக கூகுள் அல்லது கோகுல் என்கிற பெயர் வைத்திருக்கலாம் என்று கூறினார். காரணம், எந்த ஒரு தகவலை கேட்டாலும் அதைப் பற்றி விரிவாக கூறுவார். மித்ரன் ஒரு 90-ஸ் கிட். ஆனால் ஒரு சம்பவம் 80-களில் எப்படி இருந்தது 90-களில் எப்படி இருந்தது 2000-களில் எப்படி இருந்தது என்று விளக்கமாக கூறுவார். நாம் அனைவரும் பள்ளியில் சில மாணவர்களை பார்த்திருப்போம், தேர்வுக்கு படிக்காமலேயே முதல் மதிப்பெண் பெறுவார்கள். அப்படிப்பட்ட ஒரு நபர்தான் மித்ரன் என்று புகழாரம் சூட்டியுள்ளார் கார்த்தி.


Click it and Unblock the Notifications











