என் நண்பன் விஜயகாந்த் செய்யும் வேலையால் மற்ற நடிகர்கள் மாட்டிக் கொள்வோம்... சத்யராஜ் ஃபிளாஷ் பேக்
சென்னை: கடந்த வாரம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சத்யராஜ்.
எண்பதுகளின் நடிகர்களில் இன்னமும் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் சத்யராஜ் என்றால் மிகையாகாது.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் பற்றி சத்யராஜ் ஒரு நிகழ்வில் பேசியிருப்பது தற்சமயம் பகிரப்பட்டு வருகிறது.

நன்மதிப்பு
விஜயகாந்த் நடிகர் சங்கத்தை சிறப்பாக நடத்தி வந்ததால் அதை நேரடியாக பார்த்துள்ள நடிகர்கள் ரஜினிகாந்த் முதல் சிம்பு வரை பலரும் அவர் மீது இன்றுவரை மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். நடிகர் சங்கக் கடனை அடைத்து வங்கியில் சேமிப்பையும் சேர்த்து வைத்தது மட்டுமின்றி கார்கில் நிவாரண நிதி, காவேரி பிரச்சனை போன்ற பல விஷயங்களுக்கு திரை உலகினரை ஒன்று சேர்த்து பணம் வசூலித்து நிவாரண நிதி அனுப்புவது, போராடுவது போன்ற நற்செயல்களில் ஈடுபட்டவர் விஜயகாந்த்.

மரியாதை
சமீபத்தில் கூட ஜீவா தான் நடத்தி வரும் ஒரு நிகழ்ச்சியில் பேசும்பொழுது தான் நடிக்க வந்த புதிதில் விஜயகாந்த் தன்னை அழைத்து நல்ல நல்ல அறிவுரைகள் கூறியதாக பதிவு செய்திருந்தார். அந்த அளவிற்கு சங்கத்தில் புதிதாக இணைபவர்களைக் கூட தனியாக நேரம் ஒதுக்கி முக்கியத்துவம் தந்துள்ளார். கதாநாயகர்கள் என்று இல்லாமல் துணை நடிகர்களுக்கு கூட எந்தப் பிரச்சனை வந்தாலும் அதனை சுமூகமாக தீர்த்து வைப்பார் என பலரும் கூறி பார்த்துள்ளோம்.

80-களின் கதாநாயகர்கள்
80, 90களில் அவருடன் பயணம் செய்த சத்யராஜ், பிரபு போன்றவர்கள் எப்போதுமே விஜயகாந்த் பற்றி பாராட்டி பேசுவார்கள். குறிப்பாக சத்யராஜ் ஈட்டி, நூறாவது நாள் போன்ற படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். சத்யராஜின் வள்ளல் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டபோது அதை கேள்விப்பட்ட விஜயகாந்த் தானாகவே முன்வந்து அதனை தீர்க்க உதவி செய்தாராம். நான் நடித்த வள்ளல், மக்கள் என் பக்கம் போன்ற படத் தலைப்புகள் என்னை விட விஜயகாந்திற்கு தான் பொருந்தும் என சத்யராஜ் மனமார பாராட்டியுள்ளார்.

சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்
என் நண்பன் விஜயகாந்த் பற்றி நான் எப்போது பேசினாலும் முதலில் கூறுவது, திரையுலகில் அள்ளிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர், அதனை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தவர் விஜயகாந்த். ஏதாவது பொது பிரச்சனை வந்தால் கூட முதல் ஆளாக நன்கொடை தருவார். எங்களுக்கு என்ன பிரச்சனை ஆகிவிடும் என்றால் எங்களிடமும் நன்கொடை கேட்கும்பொழுது நாங்களும் கிட்டத்தட்ட அதற்கு நெருங்கிய தொகையை கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அது மட்டுமின்றி, கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு பின்னர் கொடுக்காமல் இழுத்தடிக்கக் கூடிய ஆளில்லை கொடுத்த பின்புதான் செய்தியே வரும் என்று விஜயகாந்தை பற்றி பாராட்டியிருக்கிறார் சத்யராஜ்.


Click it and Unblock the Notifications











