சட்டப்படி பார்த்தால் ராஜா சார் செய்தது சரியே, ஆனால்...: மதன் கார்க்கி
சென்னை: சட்டப்படி பார்த்தால் ராஜா சார் செய்தது சரியே. ஒரு பாடல் இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு தான் சொந்தம் என பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
காப்புரிமை கேட்டு இசைஞானி இளையராஜா பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து இனி மேடைகளில் இளையராஜா பாடல்களை பாடுவது இல்லை என எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

காப்புரிமை
சட்டப்படி பார்த்தால் ராஜா சார் செய்தது சரியே. ஒரு பாடல் இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு தான் சொந்தம்.

நட்பு
நட்பின்படி பார்த்தால் ராஜா சார் செய்தது சரி இல்லை. சட்டப்படி நோட்டீஸ் அனுப்புவதற்கு பதில் போன் செய்து பேசியிருந்தால் பிரச்சனை சமூகமாக முடிந்திருக்கும்.

பாடல்
ஒரு பாடலை தியேட்டருக்கு வெளியில் பொது மக்களுக்காக பாடினால் அதற்கான ராயல்டியை வாங்கி இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டும். ஐபிஆர்எஸ் போன்ற ராயல்டி சொசைட்டிகள் இந்த பணியை செய்கின்றன.

ராஜா
தனது ராயல்டிகளை கவனிக்க ஐபிஆர்எஸ் போன்ற நிறுவனங்களுக்கு ராஜா சார் அனுமதி அளிக்காத நிலையிலும் கூட ஒரு பாடல் அவருக்கு மட்டுமே சொந்தமாகாது.

ராயல்டி
ராஜா சார் ஒரு பொது நிகழ்ச்சியில் பாடினால் அந்த பாடல்களின் ராயல்டி சம்பந்தப்பட்ட பாடல் ஆசிரியர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு செல்ல வேண்டும்.

நோட்டீஸ்
பாடல் ஆசிரியர்களோ, தயாரிப்பாளர்களோ வக்கீல் நோட்டீஸ் அனுப்பினால் ராஜா சாரால் அவர்களின் அனுமதி இல்லாமல் பாடல்களை பாட முடியாது. இது பலருக்கு கசப்பாக இருந்தாலும் இந்த விஷயத்தை ராஜா சார் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி என மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











