தமிழ் சினிமா உலகிற்கு ஜாக்கிசான், அர்னால்டு கற்றுக்கொடுத்த பாடங்கள்!
சென்னை: ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை சாதாரணமாக ஸ்டியோவில் நடத்தலாம். கொஞ்சம் வசதி படைத்த தயாரிப்பாளர் என்றால் சினிமா தியேட்டர் அரங்கில் நடத்துவார்.
பிரம்மாண்ட தயாரிப்பாளர், பிரம்மாண்ட இயக்குநர் என்றால், வசதிக்கு ஏற்ப தனி விமானத்தில் சென்றோ, அல்லது நேரு உள் விளையாட்டரங்கத்திலோ நடத்தி பிரமாதப்படுத்துவார்கள்.
சிறப்பு விருந்தினராக பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களை வரவழைத்து அமர்களப்படுத்துவார்கள். பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களும் தமிழ் புரியாவிட்டாலும் ரசிகர்கள் சிரிக்கும் போது சிரித்து, கை தட்டும் போட்டு கை தட்டி மகிழ்ந்து ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு போஸ் கொடுத்துவிட்டு போவார்கள்.
ஆனால் சில திரைப்பட விழாக்களில் சிறப்பு விருந்தினர்களால் ஏற்படும் சிறு சிறு சம்பவங்கள் கூட காலம் கடந்து பேசக்கூடியதாக மாறிவிடுகிறது.

ஜாக்கிசான் - அர்னால்டு
ஹாலிவுட் நடிகர்களான ஜாக்கி சான் மற்றும் அர்னால்டு இருவருமே ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்த திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள்.

பிரபல நட்சத்திரங்கள்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற போது அந்த விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கமல், மலையாள நடிகர் மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் ஆகியரோடு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார்.

குப்பை இருக்கே
இசை வெளியீட்டு விழா மேடையில் ஆடியோ கேசட் சுற்றப்பட்டிருந்த பேப்பரை கிழித்து அப்படியே மேடையிலேயே போட்டு விட்டார்கள். யாருமே அதைக் கண்டு கொள்ளாமல் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் ஜாக்கிசான் அந்தக் குப்பைகளைப் பொறுக்கி எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போடுவதற்கு நடந்து சென்றார்.

கவனித்த ஜாக்கிசான்
உடனே சுற்றிருந்த நடிகர்கள் சுதாரித்து அவரிடம் இருந்த பேப்பரை வாங்கி உதவியாளர் ஒருவரிடம் கொடுத்தனர். பிறகு, ஜாக்கிசான் இசை வெளியீட்டு விழாவிற்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தாலும், குப்பைப் பேப்பரை வாங்கிச் சென்ற அந்த உதவியாளர் சரியாக குப்பைத் தொட்டியில் போடுகிறாரா என்பதைப் பார்த்து கொண்டே இருந்தார். 'தசாவதாரம்' இசை வெளியீட்டு விழாவில் இது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது. ஊடகங்களிலும், யுடுயூப், சமூக வலைத்தளங்களிலும் இப்போதும் பகிரப்படுகிறது.

நேரம் தவறாத அர்னால்டு
இதேபோல ஆஸ்கார் ரவிச்சந்திரன் படமான 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பங்கேற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தமிழ் சினிமா உலகிற்கு குறிப்பிடத்தக்க பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் நேரம் தவறாமையின் அவசியம்.

கடந்து போன நேரம்
ஐ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க பிற்பகல் 3:30 மணியில் இருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று டிக்கெட்களில் போடப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மணி 7:30-யைத் தாண்டிவிட்டது.

பாடி பில்டர்கள் ஷோ
நிகழ்ச்சியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்த அர்னால்டு முன்பு பாடி பில்ட் ஷோ நடைபெற்றது. பாடி பில்டர்கள் அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு இணைந்து மேடையேறிய அர்னால்டு, தனது பேச்சைத் தொடங்கி முடித்து அரங்கினை விட்டு வெளியேறினார்.

சட்டென்று வெளியேறிய அர்னால்டு
இசையை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹீரோ ஹீரோயின் இல்லை
'ஐ' படத்தின் இசை வெளியீடு விழா சிறப்பு விருந்தினர் இன்றி, ரஜினி இசையை வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். அந்த இசை வெளியீட்டின்போது கூட படத்தின் நாயகன் விக்ரமும், நாயகி ஏமி ஜாக்சனும் அங்கு இல்லை.

கற்றுக்கொடுத்த பாடங்கள்
'தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கிசான், 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் 'காலம் தவறாமை'யை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு. காலதாமதத்தைப் பற்றிக் கவலைப்படாமல் காத்திருக்க வைக்கும் திரை உலகினர் இனியாவது சரியான நேரத்தில் விழாக்களை தொடங்கி முடித்தால் இதுபோன்ற சங்கடங்கள் இனி நிகழ வாய்ப்பு இல்லை.


Click it and Unblock the Notifications











