அமைச்சர் இப்படி சொல்லிட்டாரே.. அப்போ திரையரங்குகளை நம்பியுள்ளவர்களின் கதி?
சென்னை: கொரோனா மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை இருப்பதால் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசித்தே முடிவெடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை அலை வாரியாக மிரட்டி வருகிறது கொரோனா வைரஸ். பல லட்சம் மனித உயிர்களை வாரி விழுங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த இரண்டாண்டுகளாக பல்வேறு உலக நாடுகளும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து நீயா நானா என போட்டி போட்டு வருகின்றனர்.

அதளபாதாளத்தில் தொழில்துறை
இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களின் படிப்பும் கேள்வி குறியாகியுள்ளது. பல தொழில்துறைகள் அதாபாதாளத்திற்கு சென்றுவிட்டன.

தள்ளி வைக்கப்படும் படங்கள்
இதில் சினிமாதுறையும் விதிவிலக்கல்ல. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு முதல் குறிக்கப்பட்ட தேதிகளில் படப்பிடிப்புகள் நடத்தப்படவில்லை. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல படங்களில் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.

திரையரங்க தொழில் பாதிப்பு
பைனான்ஸ் வாங்கி படம் பண்ணிய தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாமல் வாங்கிய கடனை அடைக்க ஓடிடி தளத்திற்கு படத்தை விற்பனை செய்து வருகின்றனர். திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1500 கோடி வியாபாரம்
வருடத்திற்கு 200 திரைப்படங்களை கொடுக்கும் சினிமா துறையான தமிழ் சினிமா கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டுக்கு 10 படங்களை கூட ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளது. வருடத்திற்கு இரண்டாயிரம் கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெறும் தமிழ் சினிமாவில், திரையரங்கு மூலம் 1500 கோடி வியாபாரம் நடைபெற்ற நிலையில் தற்போது வியாபாரமே இல்லாமல் திணறி நிற்கிறது திரையரங்க தொழில்.

கட்டுப்பாடுகளில் தளர்வுகள்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட திரையரங்குகள் இந்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் மூடப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தியேட்டர்களை திறக்க அனுமதிக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அமைச்சர் பதில்
இந்நிலையில் கொரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளை திறந்தால் ஒரே இடத்தில் அதிகளவு மக்கள் திரள வாய்ப்புள்ளது. இதனால் நோய் தொற்றும் விரைவாக பரவும் என்பதால் அரசு இப்படியொரு நிலைப்பாட்டில் உள்ளது.

யோசனையில் அரசு
வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் திரையரங்குகளை திறக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் உள்ளது தமிழக அரசு. திரையரங்க தொழிலாளர்களையும் கருத்தில் கொண்டு தியேட்டர்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











