லாக்டவுன் அறிவிச்சாச்சு.. கொரோனா நிதியுதவி வழங்க கோலிவுட் நடிகர்களும் களத்தில் இறங்குவார்களா?
சென்னை: நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை சுனாமியை விட கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.
தினமும் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 4 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் சர்வ சாதாரணமாக மரணித்து வரும் அவல நிலை நெஞ்சை உலுக்குகிறது.
பாலிவுட் நடிகர்கள் எல்லாம் களத்தில் இறங்கி மீண்டும் உதவ ஆரம்பித்துள்ள நிலையில், கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் மக்களுக்கும் சினிமா தொழிலாளர்களுக்கும் உதவ மீண்டும் முன் வருவார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

லாக்டவுன் அறிவிச்சாச்சு
வரும் திங்கட்கிழமை மே 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் தொடங்கவுள்ள நிலையில், முன்னணி சினிமா நடிகர்களும் உதவிக் கரம் நீட்டுவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் உதவி
கொரோனாவின் பாதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொடூரமாக உள்ள நிலையில், ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் களமிறங்கி மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல முன்னணி நடிகைகளும் நடிகர்களும் கொரோனா நோயாளிகளுக்காக உதவி வருகின்றனர். சல்மான் கான், சோனு சூட், சாரா அலி கான், ரவீணா டாண்டன், அக்ஷய் குமார், டாப்சி, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா ஷர்மா என ஏகப்பட்ட பிரபலங்கள் உதவிக் கரம் நீட்டி உள்ளனர்.

அமைதியோ அமைதி
மகராஷ்ட்ராவை போல தமிழ்நாட்டிலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஏகப்பட்ட சினிமா பிரபலங்களே கொரோனாவுக்கு பலியாகி வரும் சோதனையும் இங்கே அரங்கேறி உள்ளன. ஆனாலும், இன்னமும் முன்னணி நடிகர்கள் யாரும் எந்தவொரு விழிப்புணர்வு வீடியோ கூட போடாமல் பெரும் அமைதி காத்து வருகின்றனர்.

படப்பிடிப்புகளில் பிசி
லாக்டவுன் அறிவித்து விடுவதற்குள் கிடப்பில் கிடக்கும் படப்பிடிப்புகளை எல்லாம் முடித்து விட வேண்டும் என சில டாப் நடிகர்கள் வேகமாக படப்பிடிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் மக்கள் படும் அவதியை பார்த்து அவர்களுக்கு களமிறங்கி பெரிய அளவில் இன்னமும் எந்தவொரு திரைப் பிரபலமும் உதவி செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

உதவ முன் வருவார்களா
தமிழ்நாட்டில் வரும் மே 10ம் தேதி முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டை போல மீண்டும் பல முன்னணி நடிகர்களும் கொரோனா நிதி, தங்களால் முயன்ற உதவி என மக்களுக்கும் சினிமா தொழிலாளர்களுக்கும் செய்ய முன் வருவார்களா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தடுப்பூசி விழிப்புணர்வு
நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களையும், தடுப்பூசி விழிப்புணர்வுகளையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்து வருகின்றன.

விளம்பரமின்றி
பெரிய அளவில் உதவிகளை செய்யவில்லை என்றாலும் ரசிகர்கள் மன்றங்கள் மூலமாக உணவு அளிப்பது, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்குவது என சில முன்னணி ஹீரோக்கள் விளம்பரமின்றி உதவி செய்து வருகின்றனர். ஆனால், பெரிய அளவில் கடந்த ஆண்டை போலவே மக்களின் துயரை துடைக்க அதிகளவிலான சினிமா பிரபலங்கள் மீண்டும் களமிறங்கி தங்களால் முயன்ற உதவிகளை செய்தால் மக்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையை கடக்க உதவும் என்பதே பலரது கருத்து.


Click it and Unblock the Notifications











