சிவாஜியை இயக்க தயங்கிய சேரன். சிவாஜிக்குப் பிறகு விஜய்தான்… சேரனின் ரீவைண்ட்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் மறைந்து இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது. நடிப்பு என்றாலே முதலில் நமக்கு தோன்றுபவர் இவர்தான்.
கடைசியாக ரஜினிகாந்துடன் சேர்ந்து படையப்பா படத்திலும், நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா நடித்திருந்த பூப்பறிக்க வருகிறோம் படத்திலும் சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் திரைத்துறையைச் சேர்ந்த அவருடைய ரசிகர்கள் பற்றியும், அவரை இயக்க நினைத்து முடியாமல் போன கதைகள் பற்றியும் காணலாம்.

சிவாஜி ரசிகர்கள்
பொதுமக்கள் மட்டுமின்றி திரை உலகினர் பலரும் நடிகர் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்கள் ஆவர். அதிலும் சிலர் தங்களை சிவாஜியின் வெறியர்கள் என்றே சொல்வார்கள். இயக்குநர்கள் பி வாசு மற்றும் சந்தான பாரதி ஒருமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஒருவர் சிவாஜி ஐயா போல் மிமிக்ரி செய்ததால் அந்த நிகழ்ச்சியிலேயே அவரை கண்டித்தனர். அந்த வகையில் இயக்குநர் சேரனும் நடிகர் சிவாஜி கணேசனின் வெறிபிடித்த ரசிகனாம். ஆனால் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை தவிர்த்து விட்டாராம் சேரன்.

சிவாஜியை தவிர்த்தார்
சேரன் மூன்றாவதாக இயக்கிய படம் தேசிய கீதம். முதல் இரண்டு படங்களைப் போல் இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் கமெர்ஷியல் ஹிட்டானது. இதில் முதல்வராக நடிகர் விஜயகுமார் நடித்தார். முதலில் அந்தக் கதாபாத்திரத்திற்கு சிவாஜியைத்தான் மனதில் நினைத்து அவரிடம் கதையையும் கூறியுள்ளார் சேரன். ஆனால் அப்போது அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை நடிக்க வைக்க யோசித்தாராம். காரணம் படப்பிடிப்பில் முழுக்க முழுக்க வெயிலில் வெளிப்புற இடங்களில் நடிக்க வேண்டும். அவரை அழைத்துச் சென்று சிரமப்படுத்த வேண்டாம் என்று அவரை தவிர்த்துள்ளார் சேரன்.

சிவாஜிக்குப் பின் விஜய்
தவமாய் தவமிருந்து எடுத்துக் கொண்டிருந்தபோது விஜய்யிடம் ஒரு கதையை சொல்லி, அவருக்கு அந்தக் கதை பிடித்து போய் கால்ஷீட்டும் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணிபுரியும் மனநிலை தனக்கு இல்லை என்பதால் தவமாய் தவமிருந்து முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறினாராம். அதன் பின் விஜய் பிசியாக இருந்ததால் அந்தப் படம் நடக்கவே இல்லை. ஒருவேளை அதை எடுத்திருந்தால் தன் கேரியரில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்றும், தான் கதை சொல்லிய நடிகர்களிலேயே சிவாஜி ஐயாவிற்கு பிறகு ஒரு கதையை முழு கவனத்துடன் கேட்டவர் நடிகர் விஜய்தான் என்றும் சேரன் கூறியுள்ளார்.

நந்தா
அதேபோல இயக்குநர் பாலா இயக்கிய நந்தா திரைப்படத்தில் முதலில் ராஜ்கிரன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க சிவாஜி ஐயாவிடம் தான் கதை கூறி இருக்கிறார். ஆனால் அவர் இறந்துவிடவே அவருக்கு பதில் ராஜ்கிரன் நடித்திருந்தார். அவரும் அந்த கதாபாத்திரத்தை பிரமாதமாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











