பாலா.. ஒய் திஸ் கொலவெறி சார்?!?
சென்னை: இது மாதிரியொரு சினிமாவை இயக்கித் தர பாலாவால் மட்டுமே முடியும்..! உலகில் இருக்கும் கஷ்டங்களையெல்லாம் கடைந்தெடுத்து தருவதில், பாலாக்கு நிகர் பாலா தான். அவருடைய ஆறாவது படைப்பு 'பரதேசி'.
பரதேசிக்கு எதிர்பார்த்த அளவுக்கு தேசிய விருதுகள் கிடைக்கவில்லை. இதனால் பாலா தரப்பு வருத்தமாகத்தான் உள்ளது. ஆனாலும் பாலாவின் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடிக் கொண்டுதான் உள்ளனர்.
1939-களில் நடந்த கதையை இத்தனையாண்டுகள் கழித்து செய்வதற்கே ஒரு தைரியம் வேண்டும்.. அதன் நேர்த்தியை, களத்தை, கதையை சிறிதும் கெடாமல், முடிந்தவரையிலும் ருசிக்க வைக்கும் பண்டத்தை போல சுவைபட கொடுப்பதும் ஒரு படைப்பாளியின் திறமை.. இதுக்காகவே பாலாவுக்கு தனி அவார்டுதரலாம்.
சரி இந்தப் படத்தில் வேறு யாருக்கெல்லாம் தரலாம்.. ஒரு ஜாலி ரவுண்டப் போகலாமா..

ஆச்சரியக்குறியா? கேள்விகுறியா?.. விருது
தேநீரின் சுவைக்குள் அடங்கிய சுமைகளையும், வலிகளையும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் கதற கதற தரும் பாலாவிற்கு.
ஒய் திஸ் கொலவெறி சார்?!?

ஒட்டுப்பொறுக்கியின் வருத்தம்...
ஒட்டுப்பொறுக்கியாக வரும் அதர்வா வாங்கிய அடிக்காகவாவது ஒரு விருது கொடுத்திருக்கலாம். எனக்கொரு டவுட், அதர்வா, யாராவது உங்கள ‘ரொம்ப நல்லவர்னு‘ சொன்னாங்களா? இம்பூட்டு அடி வாங்கியிருக்கீங்களே.

லூசுப்பெண்ணே... லூசுப்பெண்ணே...விருது
அதர்வாவை டீஸ் செய்கிறேன் பேர்வழி என வேதிகா செய்யும் ஒவ்வொரு செயலும் நிச்சயம் விருதுக்கானவை. 1939-ல் நம்ம பாட்டிங்க இப்படியெல்லாம் லூசுத்தனமாவா இருந்தாங்க!!.

கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு... விருது
எவ்ளோ கருப்பு சாயம் வாங்குனாங்களோ, வீணா போய்டக்கூடாதுனு எல்லாருக்கும் பூசி விட்ருக்காய்ங்க. இப்படிக் கருப்புக் கலர் தாங்கிகளாக வரும் வேதிகாவும், தன்ஷிகாவும் ஏதாவது சோப் கம்பெனி ஸ்பான்சர் வாங்கிக்கங்க. கலரைப் போக்க சோப் வாங்கி கட்டுப்படி ஆகாதுங்க.

இதயம் பதறுது...விருது
அட்டைப்பூச்சி கடி, அவதிப்படும் மக்கள் பார்க்கும் போதே.. அப்பப்பா...
தப்பித்து செல்ல முயற்சி செய்பவர்களோட கால்பாதத்திற்கு பின் பகுதியில் கட்டிங் பிளேயரால் வெட்டப்படுவதும் சகித்துக்கொள்ளமுடியாத கொடூரங்கள். இதற்காகவும் விருது தரலாம்.

கோட்டை விட்ட கோணங்கிகள் - விருது
அப்புறம் ஜி.வி.பிரகாஷும், வைரமுத்துவும். அஸ்திவாரமாக இருக்க வேண்டிய ஜி.வி.பிரகாஷும், வைரமுத்துவும் தங்கள் கோணங்கித்தணத்தால் கோட்டை விட்டு விட்டனர், பாலாவையும் கைவிட்டு விட்டனர். இவங்க பில்டிங் ஸ்டிராங்காதான் இருக்கு, ஆனால் பரதேசியோட பேஸ்மென்ட்டைத்தான் வீக் ஆக்கிட்டாங்க.

கல்லுக்கும் கண்ணீர் வரும்...விருது
மனித மனங்களின் ஆசை, விருப்பு, வெறுப்பு, கோபம், பொறாமை, குரோதம், காமம் என்று அனைத்தையும் கலந்து கட்டி கசையடி அடிப்பதற்காக பாலாவுக்கு.

மனதை நெருடும் முள்... விருது
பீரியட் பிலிம் என்றாலே அப்போதைய கலாச்சாரத்தை காண்பிச்சா போதும்... காட்சியின் கலர்?.. இல்லாவிடில் அதுவே படத்தில் காமெடியாகிடும்..!

கோணிப்பை விருதை தட்டிட்டுப் போயிருச்சேப்பு...
இந்தப் படத்திலேயே பெரிய மேட்டர் என்னன்னா, காஸ்ட்யூம்தான். அதிக கஷ்டப்பட்டு கிழிந்த, அழுக்குச் சாக்கை கண்டுபிடித்த உடையலங்காரத்திற்கு தேசிய விருது கிடைத்தது தான் கொஞ்சம் ஆறுதல். ஆனா கோணிப்பை கோவணம், குற்றாலத் துண்டு, கொஞ்சம் நஞ்சு போன சட்டை, கிழிந்து போன சேலை என சிம்பிளாக காஸ்ட்யூம் போட்டு காஸ்ட்லியான விருதை தட்டி விட்டாரே பூர்ணிமா.. அவர்தாங்க ரொம்ப பெரிய அதிர்ஷ்டசாலி.


Click it and Unblock the Notifications











