டெங்கு, ஊழலுக்கு மட்டும்தான் குரலா? சினிமாவுக்கு இல்லையா? கமலை சுற்றும் கேள்விகள்!
தான் மற்ற சினிமாக்காரர்கள் போலவோ அரசியல்வாதிகள் போலவோ அல்ல. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த மற்றவர்களை போல அல்ல என்று அடிக்கடி சொல்லிக் கொள்பவர் கமல்ஹாசன். இப்போது அரசியல் எண்ட்ரிக்காக தீவிரமாக அச்சாரம் போட்டு வருகிறார்.
ட்விட்டர் மூலம் அதிமுக அரசுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியவர் இப்போது வேட்டி, சட்டை ஃபோட்டோஷூட் எடுத்து ஒரு வார இதழில் தொடர் எழுதி கார்ப்பரேட் ஸ்டைலில், அரசியலுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்.

நேரடியாக தெருவில் இறங்கி போராடாமல் இப்படி மேட்டுக்குடிமகனாகவே இருப்பது கமலின் அரசியலுக்கு சாதகமா? பாதகமா? என்று விரைவில் தெரிய வரும்.
ஆனால் இப்போது நாம் சொல்லவிருப்பது வேறு...
இன்னும் சினிமாவில் இருந்து விலகவில்லை கமல். அரசியலுக்குள் முழுமையாக நுழையவும் இல்லை. ஆனால் சினிமாவை மறந்துவிட்டார் என்று குற்றச்சாட்டு வைக்கிறது கோலிவுட். டெங்கு, ஊழல் என்று அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர் தமிழ் சினிமாவின் அடிப்படை பிரச்னைகளுக்கு கூட சரியாக குரல் கொடுக்க மறுக்கிறார். ஜிஎஸ்டியால் சினிமா கடுமையாக பாதிக்கும் என்று சினிமாக்காரர்கள் போராடியபோது கமல் வாயே திறக்கவில்லை. கடந்த பத்து நாட்களாக பேசப்படும் தியேட்டர் கேண்டீன் பொருட்கள் விலை கட்டுப்பாடு, பார்க்கிங் கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்தும் கமலிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை.
இன்னொரு பக்கம் இவரால் இரண்டு படங்கள் முடங்கி நிற்கின்றன. இரண்டுமே வெளிப் படங்கள். ஆஸ்கர் ரவிச்சந்திரன் இனி படம் எடுக்கவே முடியாத நிலைக்குப் போய்விட்டார் விஸ்வரூபம் 2-ஆல். இன்னொரு நிறுவனம் லைகா. மென்று முழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் இப்போது சொல்லிக்காட்டும் சினிமா அமைப்புகள் கமல்ஹாசன் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications











