“இதனால்தான் கேரளா இன்னமும் ‘மோடி’பைடாகவில்லை”.. பிரபல பாலிவுட் நடிகர் கூறும் நச் காரணம்!
கேரள மாநிலம் உலகின் மிகச் சிறந்த சமத்துவ பூமி என நடிகர் ஜான் ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கேரளா மாநிலத்தில் இன்னமும் மோடியால் சோபிக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம்.
பிரபல இந்தி நடிகர் ஜான் ஆப்ரஹாம், மெட்ராஸ் கபே, சத்யமேவ ஜெயதே உள்ளிட்ட படங்களில் தேசபக்தி உடையவராக நடித்துள்ளார். ஆனால் அவர் எப்போதும் அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்தது இல்லை. இந்தியில் பிஸியான நடிகராக இருந்தாலும் ஜான் ஆப்ரஹாமின் சொந்த மாநிலம் கேரளா தான்.
இந்நிலையில் மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜானிடம், கேரளா ஏன் இன்னும் மோடிபைடாக மாறவில்லை என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக, அமைதியாக வாழக்கூடிய மாநிலம் கேரளா என்றார்.

அமைதியான மாநிலம்
இதுகுறித்து அவர் கூறியதாவது, "கேரளாவில் மோடியால் ஏன் இன்னும் ஜெயிக்க முடியவில்லை என கேட்கிறீர்கள். அது தான் கேரளாவின் அழகே. ஒரு 10 அடி இடைவெளியில், ஒரு இந்து கோயில், மசூதி, சர்ச் ஆகிய மூன்றையும் அங்கு பார்க்க முடியும். எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக வழிபாடு நடக்கும். அது அங்கு ஒரு பிரச்சினையே இல்லை.

உலகின் எடுத்துக்காட்டு
உலகமே இன்று முன்நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கேரளா தான். எல்லாம் மதங்களும், இனங்களுக்கும் ஒரே இடத்தில் அமைதியாக வாழ முடியும் என்பதற்காக மிகச் சிறந்த உதாரணம் கேரளா.

கம்யூனிஸ்ட்
மற்றொரு பக்கம் கேரளா ஒரு கம்யூனிச மாநிலம். பிடல் காஸ்ட்ரோ மறைந்த போது கேரளாவில் அவருடைய பதாதைகளை ஏந்தி பலர் இரங்கல் செலுத்தியது எனது நினைவில் இருக்கிறது. என்னுடைய சிறு வயதில் காரல் மார்க்ஸ் பற்றிய புத்தகத்தை கொடுத்து எனது தந்தை படிக்க சொன்னார்.

சமத்துவ கோயில்
எனவே ஒவ்வொரு மலையாளிக்குள்ளும் ஒரு கம்யூனிஸ்ட் இருக்கிறான். சமத்துவமான வாழ்க்கை, சமமான பொருளாதார பங்கீடு ஆகியவை தான் எங்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் ஜொலிக்கும் கோவில் தான் கேரளா", என ஜான் அப்ரஹாம் கூறினார்.


Click it and Unblock the Notifications











