ஃபர்ஸ்ட் காப்பி.... ஹீரோக்களின் பலே ஃபார்முலா!
ஏற்கெனவே தமிழ் சினிமா அழியும் நிலையில் நிற்கிறது. எப்போது தியேட்டர்கள் குடோன்கள், கல்யாண மண்டபங்கள் அல்லது குட்டிச் சுவர்களாக அழிய ஆரம்பித்ததோ அப்போதே சினிமாவும் அழியத் தொடங்கியது.
இதனை உணராத திரையுலகம் சாட்டிலைட் இருக்கு என்ற நம்பிக்கையில் கெத்தாக வலம் வந்தது. ஆனால் சில காலமாக சாட்டிலைட் உரிமம் சரிவர வாங்குவதில்லை. முக்கியமாக, பெரிய ஹீரோக்களின் படங்களே ரிசல்ட் பார்த்துதான் வாங்கப்படுகின்றன. அடுத்தகட்ட நடிகர்களின் படங்கள் என்றால் மோசம்... எந்த சேனலுமே சீண்டாது.

முன்பெல்லாம் படம் தோல்வி என்றாலும் கூட யாருக்குமே நஷ்டத்தை ஏற்படுத்தாது. ஆனால் இப்போது படம் ஹிட் என்றால் கூட நஷ்டம்தான் மிஞ்சுகிறது.
இந்நிலையில்தான் ஹீரோக்களே தயாரிப்பாளர்களாக இறங்கினார்கள். சூர்யா, கார்த்தி, விஷால், ஆர்யா என முன்னணி ஹீரோக்கள் தங்கள் காசை போட்டோ, தங்கள் பெயரில் ஃபைனான்ஸ் வாங்கியோ தான் படம் தயாரித்தார்கள். இதனால் லாப, நஷ்டங்கள் அவர்களோடேயே முடியும். ஆனால் இப்போது வளர்ந்து வரும் சில ஹீரோக்கள் ஃபர்ஸ்ட்காப்பி என்னும் பெயரில் நோகாமல் நோன்பு கும்பிடுகின்றனர்.
விமலுக்கு என்று பெரிய ஓப்பனிங்கே கிடையாது. ஆனால் அவரை அணுகும் தயாரிப்பாளர்களிடமே 'நீங்க பணத்தை கொடுங்க... நான் ஃபர்ஸ்ட் காப்பி எடுத்து தர்றேன்' என்று கேட்கிறாராம்.
அதர்வா சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார். அதிலும் இப்படி ஃபர்ஸ்ட் காப்பி கதைதான். அவருடைய சொந்த காசை போடாமல் தன்னிடம் கால்ஷீட் கேட்கும் தயாரிப்பாளர்களின் பணத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்.
விஷ்ணுவும் சொந்த கம்பெனி தொடங்கி கதை கேட்கிறார். ஆனால் ரிஸ்க் எல்லாம் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்குத்தான். ஆமாம், அவர்களுடன் இணைந்துதான் தயாரிப்பு முயற்சியில் ஈடுபடுகிறார் விஷ்ணு.
சிவகார்த்திகேயன் கதையும் இதுதான் என்கிறார்கள்.
ஹீரோக்கள் மட்டுமல்லாது பிஜி முத்தையா போன்ற சில கேமராமேன்களும், சில இயக்குனர்களும் கூட ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தான் படம் எடுக்கிறார்கள். இந்த ஃபர்ஸ்ட் காப்பியில் ரிஸ்க் எல்லாம் தயாரிப்பாளர்கள் வசம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











