ஈழத்தமிழனை கொச்சைப்படுத்தியதா மாசு?… வரிச்சலுகை கிடைக்காத ரகசியம் சொன்ன சிநேகன்
சூர்யா நடித்த மாஸ் என்ற படத்தை மாசு என்ற மாசிலாமணி என்று திடீர் பெயர் மாற்றம் செய்தனர். எல்லாம் வரிச்சலுகையை மனதில் வைத்துதான் என்று கூறினார்கள். ஆனாலும் மாசு படத்திற்கு வரிச்சலுகை இல்லை என்று கையை விரித்து விட்டார்கள்.
காரணம் என்ன கேட்டால் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியதுதான் என்று சப்பை காரணத்தை சொன்னார்கள். ஆனால் அதுவல்ல உண்மை காரணமாம். உண்மையிலேயே வரிச்சலுகை கிடைக்காமல் போனதற்கு காரணம் வேறு என்று போட்டு உடைத்துள்ளார் பாடலாசிரியர் சிநேகன்.
'சாந்தன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜாக்குவார் தங்கம், எஸ்.வி.சேகர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் சினேகன், "பெரிய படங்களுக்கு ஒரு சென்சார், சின்ன படங்களுக்கு ஒரு சென்சார் என்று குறிப்பிட்டார்கள். குறிப்பிட்ட 4 பேர் மட்டுமே சென்சார் போர்டில் இல்லை. 5 அல்லது 6 பேர் குழுவாக இணைந்து தான் சென்சாருக்காக படம் பார்ப்பார்கள்.

விலை போகும் அதிகாரிகள்
உண்மையில் சில பேர் சில நேரத்தில் விலை போய் விடுகிறார்கள். இதை நான் சொல்லலாம், ஆனால் எஸ்.வி.சேகரால் அதிகாரத்துக்கு விலை போகிறார்களா, பணத்துக்கு விலை போகிறார்களா, அதிகாரிகளுக்கு விலை போகிறார்களா என்பது தெரியாது. ஆனால் அதையும் மீறி ஒரு உண்மை விஷயத்தைச் சொல்கிறேன். சில நேர்மையான அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று பொடி வைத்துப் பேசினார்.

வரிச்சலுகை இல்லையே?
'மாஸ்' படத்துக்கு வரிச்சலுகை கிடையாது. சன் டி.வி தொலைக்காட்சிக்கு உரிமம் கொடுத்ததால் தான் வரிச்சலுகை கொடுக்கவில்லை என்கிறார்கள். 'மாஸ்' என்பது தமிழ் பெயர் இல்லை, அது தான் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். உண்மை காரணம் என்ன தெரியுமா?

ஈழத்தமிழருக்கு அவமரியாதை
அப்படத்தில் 'ஈழத் தமிழ் பேசுகிறவனா... உன்னை உதைக்க வேண்டும்' என்று ஒரு வசனம் வருகிறது. அதை கோடிட்டு, "ஈழத்தமிழையும், ஈழத்தமிழர்களையும் கொச்சைப்படுத்துவதால் இப்படத்துக்கு வரிச்சலுகை கிடையாது" என்று ஓர் அதிகாரி எழுதியிருக்கிறார்.

நேர்மையான அதிகாரிகள்
இப்படிப்பட்ட அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. அந்த அதிகாரியின் நேர்மைக்கு நிறைய அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இதுதான் தனக்கு பிடித்த விசயம் என்று பேசினார் சிநேகன்.


Click it and Unblock the Notifications











